ரஜினி அரசியலுக்கு வர்றது சின்ன அறிகுறியாத் தெரியுது… சொல்வது "சின்ன" கலைவாணர்!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து சின்ன சின்ன அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அப்படியே அவர் வந்தாலும் அதனை தான் வரவேற்பதாகவும் விவேக் கூறியுள்ளார்.
தூத்துக்குடி: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்திற்கு பலர் வெல்கம் சொல்லி இருக்கிறார்கள்.
எதிர்ப்பு
அதே நேரத்தில், ரஜினிக்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. தமிழர் முன்னேற்றப் படை என்ற தமிழ் அமைப்பு ஒன்று நேற்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. அவர்கள் சுமார் 30 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
வரவேற்பு
எதிர்ப்பு வலுப்பது போன்றே ஆதரவும் பெருகி வருகிறது. தூத்துக்குடியில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்றுள்ளார். சக நடிகன் என்ற முறையிலும், தமிழகத்தில் வாழும் பொதுமக்களின் ஒருவனாகவும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக விவேக் தெரிவித்துள்ளார்.
சின்ன சின்ன அறிகுறி
ஆனால், ரஜினிகாந்த் அரசிலுக்கு வருவதற்கான சின்ன சின்ன அறிகுறிகள் தெரிவதாக அவர் கூறியிருப்பதுதான் காமிடியின் உச்சம். ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், தனது செயல்பாடு பேச்சு என அனைத்து அரசியல் மயமாகி இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. ஆனால் அரசியல் அறிகுறி என்று விவேக் சொல்லி மழுப்பி இருக்கிறார்.
அவரின் சொந்த விருப்பம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது உரிமை என்றும் இது ஜனநாயக நாடு யாரும் அரசியலுக்கு வரலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியலுக்கு வருவதும் வராமல் போவதும் அவரவர் விருப்பம் என்றும் விவேக் கூறியுள்ளார்.