அட.. இதைத்தான் அன்றைக்கே நம்ம எம்.ஆர். ராதா சொல்லிட்டாரே செல்லம்!
நடிகர்களை கொண்டாடக் கூடாது என்று அன்றே மறைந்த எம்ஆர் ராதா கூறியதைத் தான் இன்று நடிகர் பிரகாஷ்ராஜூம் கூறி இருக்கிறார்.
சென்னை : நடிகர்கள் மக்களின் கலைஞர்கள் அவர்களைக் கொண்டாடக் கூடாது என்று மறைந்த பழம்பெரும் நடிகர் எம். ஆர். ராதா கூறிய கருத்தின் பிரதிபலிப்பு போலவே தான் நடிகர் பிரகாஷ்ராஜூ இன்று நடிகர்கள் புகழை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறி இருக்கிறார்.
நடிகர் எம்ஆர் ராதா நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. அதில் எம்ஆர் ராதா நடிகர்கள் பற்றிய பல உண்மைகளை வெட்டவெளிச்சமாக்கி இருப்பார். படத்தில் நடிகர்களைப் பார்த்தார் ரசித்து விட்டு செல்லுங்கள், அதை விட்டு அவர்களை கொண்டாடக் கூடாது. நடிகர்கள் காசிற்காக நடிப்பவர்கள் அவர்களையே ஏன் நீங்கள் காலம் முழுவதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு அறிவாளி, உயர்ந்த அதிகாரி உள்ளனர் அவர்களைப் புகழுங்கள், அதை விட்டுவிட்டு எங்கோ கூத்தாடி விட்டு அதை இங்கு திரையில் காட்டுபவர்களை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள். நடிகர்களுக்கு பணம் வந்த பின்னர் கலைஞர் என்ற பட்டம் கிடைத்தது. நடிகர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள், அதே போன்று வருமான வரி பாக்கி வைப்பதும் நாங்கள் தான்.
எம் ஆர் ராதா உதிர்த்த உண்மைகள்
வருமான வரி என்பது மக்களின் பணம் அதை கொடுக்காமல் ஏமாற்றும் கூட்டம் நடிகர்கள் கூட்டம். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. மக்கள் பணத்தை மோசம் செய்யும் கூட்டம் சினிமாக்காரர்கள் கூட்டம். நானே 13 லட்சம் வருமான வரி கட்ட வேண்டும், ஆனால் என்னிடம் இருந்து வாங்கி விட முடியுமா.
நடிகர்களைக் கொண்டாடாதீர்கள்
நாங்கள் பணக்காரர்களாக இருக்கிறோம் என்றால் ராப்பகலாக நினைக்க வேண்டியது மக்களைத் தான். மக்கள் கொடுத்த பணத்தில் தான் நாங்கள் பணக்காரர்கள் ஆகி இருக்கிறோம். உங்களின் பணத்தால் முன்னேறியயவர்கள் தான் நாங்கள், நீங்கள் தான் எங்களுடைய தலைவர்கள். அதைவிட்டு விட்டு எங்களைத்தலைவர்களாக்கிக் கொண்டு திரிகிறது ஒரு கூட்டம் என்று பேசி இருக்கிறார்.
சமூக அக்கறையுள்ள கருத்து
எம்.ஆர். ராதாவின் கருத்தையேத் தான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கூறி இருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். அரசியலுக்கு வரும் தலைவர்கள் தங்கள் புகழை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது. நாடு எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெளிவான நிலைப்பாட்டுடன் அரசியலில் இறங்க வேண்டும், மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதோடு வாக்களிக்கும் போது ஒரு ரசிகனாக இல்லாமல் ஒரு குடிமகனாக வாக்களிக்க வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் கூறி இருந்தார்.
புகழ் மட்டுமே போதுமா?
பிரகாஷ்ராஜின் இந்த கருத்து மறுப்பதற்கில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் மக்களின் பிரச்னைகளை உணர்ந்து செயல்படும் ஒருவர் மட்டுமே மக்களுக்கான அரசைக் கொடுக்க முடியும். புகழ்ச்சியால் வெற்றி பெற்றாலும் அதனால் பயன் இருக்காது என்ற சமூக அக்கறையுடனே இந்த கருத்து சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி மற்ற தொழில்களைப் போல நடிப்பு என்பதும் ஒரு தொழில் ஆனால் அரசியல் என்னும் அரியாசணையில் ஏற அந்த ஒரு தகுதி மட்டுமே போதுமா என்ற சமூக உள் அர்த்ததையும் இதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் கருத்தாகவும் உள்ளது.