அக்கா, தங்கச்சி சண்டை போலத்தான் இதுவும் - அம்பிகா, ராதா
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்டுள்ள மோதல் அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி சண்டை போலத்தான். தேர்தல் முடிந்ததும் சரியாகி விடும் என்று நடிகைகள் அம்பிகா, ராதா கூறியுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரும் திரளான நடிகர், நடிகையர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
நடிகர்கள் ராம்கி, கரண், சரத்பாபு, அருண் பாண்டியன், சத்யராஜ், சிபிராஜ், செந்தில் உள்பட பலரும் திரண்டு வந்து வாக்களித்தனர்.
நடிகர் ராம்கி கூறுகையில், குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை போலத்தான் இதுவும். இறுதியில் அனைவரும் சமாதானமாகப் போவோம். தேர்தல் முடிந்த பின்னர் சண்டைகளை சரி செய்யும் முயற்சியில் என்னைப் போன்றவர்கள் ஈடுபடுவோம் என்றார்.
நடிகை ராதா கூறுகையில், அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பி சண்டை நடப்பதில்லையா. அது போலத்தான் இதுவும். இதில் யாரும் பலம் காட்ட மோதவில்லை. ஜனநாயக ரீதியில் இது நடக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் இது அமைதியில் முடிவடையும் என்றார்.
நடிகை ராதாவின் கருத்தையே அவரது அக்காவான நடிகை அம்பிகாவும் எதிரொலித்தார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், தேர்தலில் வாக்களித்து விட்டேன். வாக்குகள் செல்லும்படியாக வாக்களித்து விட்டேன். அதுதான் முக்கியம். தேர்தலில் யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார்.
நடிகை லட்சுமி கூறுகையில், இந்தத் தேர்தல் என்றில்லை, எந்தத் தேர்தலாக இருந்தாலும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயகக் கடமை. அந்த வகையில் நான் வாக்களித்துள்ளேன் என்றார்.
நடிகர் செந்தில் கூறுகையில், எனது வாக்கு எப்போதுமே பொதுவானவர்களுக்குத்தான். மனசாட்சிப்படி வாக்களிப்பேன் என்றார்.