தமிழ்நாட்டு நடிகர்கள் அரசியலுக்கு வருவது பேரழிவு என்கிறாரா பிரகாஷ்ராஜ்? ஆனந்தராஜ் பொளேர்
நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பிரகாஷ்ராஜின் கருத்துக்கு தமிழ் நடிகர்கள் ஆனந்தராஜ், மயில்சாமி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
சென்னை: நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பிரகாஷ்ராஜின் கருத்துக்கு தமிழ் நடிகர்கள் ஆனந்தராஜ், மயில்சாமி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
பெங்களூரில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பிரகாஷ்ராஜ் நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். அப்போது ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். நடிகர்கள் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. அவர்கள் கட்சி தொடங்க கூடாது. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் எப்போதும் சேரப்போவதில்லை. உபேந்திரா, ரஜினி என யார் தொடங்க போகும் கட்சிக்கும் நான் ஆதரவு அளிக்க மாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.
பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு நடிகர் மயில்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் ''யாரும் யாரையும் குற்றம்சாட்ட கூடாது. அவங்க அவங்க வேலையை பார்க்கட்டும். அரசியலுக்கு வந்து நல்லது பண்ணுனா பண்ணட்டும். அது இல்லாம ஒருத்தரை அரசியலுக்கு வரக்கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது. இன்னைக்கு அவர் வந்தா, நாளைக்கு நீங்க வாங்க. இதுல என்ன இருக்கு'' என்றார்.
நடிகர் ஆனந்த்ராஜ் , பிரகாஷ்ராஜின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அப்போது ''அவர் கர்நாடக நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி சொல்கிறாரா இல்லை தமிழ்நாட்டு நடிகர்கள் வருவது பற்றி சொல்கிறாரா என்று தெரியவில்லை. அண்ணா தொடங்கி அம்மா வரை அனைவரும் கலைத்துறையினர் தான்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலில் வெற்றியும் அடைந்து இருக்கிறார்கள். தோல்வியும் அடைந்து இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் யார் வேண்டுமானலும் வரலாம்'' என்றார்.
நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய இயக்குனர் விக்ரமன் ''ஓட்டு போடும் யாருக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. நடிகர்கள் கண்டிப்பா வரலாம். ஆனா வெறும் நடிகருங்கிற புகழை மட்டும் வச்சுக்கிட்டு அரசியலுக்கு வரக்கூடாது. அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செஞ்சு அது மூலமாக வெற்றி பெறணும். தமிழ்நாட்டுல முக்கால்வாசி அரசியல்வாதிகள் நடிகர்கள்தான்'' என்றார்.