தமிழகத்தில் இனி வரும் காலங்களில் ரஜினி கமல் உள்ளிட்ட எந்த நடிகரும் முதல்வராக முடியாது : தனியரசு
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் ரஜினி கமல் உள்ளிட்ட எந்த நடிகரும் முதல்வராக முடியாது என்று தனியரசு தெரிவித்துள்ளார்.
கரூர் : தமிழகத்தில் நடிகர்கள் ஆண்ட காலம் முடிவடைந்துவிட்டது. இனி வரும் காலங்களில் நடிகர்கள் நிச்சயம் நாடாள முடியாது. இந்த குறுகிய காலகட்டத்திலேயே அரசியல் எத்தனை கடினமானது என்று காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ., தனியரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு கரூரில் எம்.எல்.ஏ. கரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை மத்திய அரசு அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது சட்டவிரோதமானது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு இந்திய அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், இறையாண்மைக்கும் எதிரானது. எனவே, உடனடியாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளித்து மத்திய அரசை அகற்ற வேண்டும்.
ரஜினிகாந்தின் திண்டுக்கல் மக்கள் மன்றத்தில் குளறுபடிகள் ஏற்பட்டு நிர்வாகிகள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து பிரச்னைகள் வந்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் பார்க்கும்போதே அரசியல் எத்தனை கடுமையானது என்று ரஜினி உணர்ந்திருப்பார்.
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமலஹாசன், முதல் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார். இனி அவர் நிச்சயம் அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளமாட்டார். இவர்கள் இருவரையும் நம்பி மக்களும் ஓட்டுப்போடமாட்டார்கள்.
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் எந்த ஒரு நடிகரும் நாடாள முடியாது. கட்சி வேண்டுமானால் தொடங்கமுடியும் ஆனால், முதல்வர் பதவியை அடையமுடியாது. இவ்வாறு தனியரசு கூறினார்.