யாகூப் தூக்குக்கு எதிர்ப்பு- மலையாள நடிகை அருந்ததியின் பக்கத்தை முடக்கியது பேஸ்புக்
சென்னை: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல மலையாள நடிகை அருந்ததியின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாகூப் மேமன் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்பட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகையான அருந்ததி, யாகூப் மேமன் தூக்கு தண்டனைக்கு எதிராக தனது பேஸ்புக்கில் சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அருந்ததியின் பேஸ்புக் மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை பேஸ்புக் நிறுவனமே மேற்கொண்டுள்ளது. இது குறித்து நடிகை அருந்ததி கூறுகையில், "பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். தேவையில்லாத நிபந்தனைகளை விதித்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை அபகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.