நடிகர்களின் கொள்கைகள் தெரிஞ்சாதானே கருத்து சொல்ல முடியும்...நடிகை கௌதமி
அரசியலுக்கு வரும் நடிகர்களின் கொள்கைகள் தெரிந்தால்தானே கருத்து சொல்ல முடியும் என்று நடிகை கௌதமி கேள்வி எழுப்பினார்.
கரூர்: அரசியல் வரும் நடிகர்களின் கொள்கைகளை கேட்டபிறகே கருத்து சொல்ல முடியும் என்று நடிகை கௌதமி கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சூசகமாக கடந்த மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் எதிர்பபும் தெரிவிக்கின்றனர்.
தமிழர்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற அஜெண்டாவையும் வைத்துள்ளனர். ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னர் ஏன் இத்தனை கருத்துகள் என்றும் ஒரு சில கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
கரூரில் கௌதமி
செய்தியாளர்களும் ரஜினியுடன் நடித்த நடிகர், நடிகைகள், நடிக்காத பிரபல நடிகர் , நடிகைகள் ஆகியோரிடம் ரஜினியின் அரசியல் குறித்து கேள்வி எழுப்ப தப்புவதே இல்லை. அந்த வகையில் கரூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கௌதமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மார்பக புற்றநோய்
கரூர் ரோட்டரி சங்கம் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள நடிகை கௌதமி கூறுகையில், பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நானும் அவதி
கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் நான் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டேன். எனினும் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் அதில் இருந்து மீண்டு வந்தேன். சுயபரிசோதனை மூலமே புற்றுநோய் குறித்து தெரிந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் எளிது
தொடக்க காலத்திலேயே புற்றுநோயை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் அதிலிருந்து குணமடைவது எளிது. எனவே 40 வயது முடிந்த அனைத்து பெண்ளும் தாங்களாக எவ்வித தயக்கமுமின்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கிராமபுறங்களில் வசதி
கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோயை கண்டறிய உதவும் மேமோகிராம் பரிசோதனை வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தவே பிரதமர் மோடியை சந்தித்து பேசினேனே தவிர, அதில் அரசியல் ஏதும் இல்லை.
கொள்கை என்ன
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்பவர்கள் மக்கள்தான். மேலும் அரசியலுக்கு வரும் நடிகர்களின் கொள்கைகளை தெரிந்து கொண்ட பிறகே கருத்து சொல்ல முடியும்.
பெண்கள் நலன்
பெண்கள் நலனில் ஜெயலலிதா அதிக அக்கறை கொண்டவராக திகழ்ந்தார். பல திட்டங்களை கொண்டு வந்தார். அதை தற்போதைய ஆட்சியாளர்கள் விரிவுபடுத்த வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணவேண்டும் என்றார் அவர்.