ஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டானே... நடிகை கஸ்தூரி ஆவேசம்
சென்னை: நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கில் நான்கு பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்திருப்பதை நடிகை கஸ்தூரி வரவேற்றுள்ளார். அதேசமயம், ஒருவன் மட்டும் தப்பி விட்டது குறித்து அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இளம் மாணவி நிர்பயா மிகக் கொடூரமாக 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு. மிருகங்களிடம் சிக்கி சீரழிந்த அவர் பின்னர் உயிரிழந்தார். இந்த கொடும் செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அதில் ராம்சிங் என்பவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டு விட்டான்.
மற்ற ஐந்து பேரில் ஒருவன் மைனர் என்பதால் அவனை மட்டும் சிறார் கோர்ட்டில் விசாரித்து கடந்த வருடம் விடுதலை செய்தது சட்டம். இத்தனைக்கும் இந்த கொடூரன்தான் நிர்பயாவை மிக மோசமாக சித்திரவை செய்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டவன். அப்போது அந்த கொடூரனுக்கு 16 வயதுதான் என்பது மிகப் பெரிய கொடுமை. அந்த காரணத்திற்காகத்தான் அவன் சிறார் சட்டத்தின் கீழ் போய் தப்பி விட்டான்.
இந்த நிலையில் தற்போது மற்ற 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு நடிகை கஸ்தூரி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், ஒரே ஒரு மிருகம் மட்டும் தப்பி விட்டதாக அவர் ஆவேசப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், கிட்டத்தட்ட 5 வருடத்திற்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு மிருகம் மட்டும் சுதந்திரமாக அடியெடுத்து வைத்துள்ளான். அதை மட்டும்தான் என்னால் ஏற்க முடியவில்லை. இந்த தீர்ப்பு மிக மிக சக்தி வாய்ந்த தொடக்கமாக இருக்க வேண்டும்.
நிர்பயாவின் பெற்றோரின் கண்ணீரிலிருந்து சட்டப் புரட்சி தொடங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என்றார் கஸ்தூரி.