நடிகை குயிலி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு- ஜூலை 6க்கு ஒத்திவைப்பு
சென்னை: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நடிகை குயிலி மீது தொடுக்கப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கு ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட கோபாலுக்கு ஆதரவாக நடிகை குயிலி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி பிரசாரம் செய்தார்.
ஆனால் அவர் புதிய பஸ் நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு நகரம் முழுவதும் பிரசாரம் செய்தது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக நடிகை குயிலி, புதிய வீடுகளுக்கான சங்க தலைவர் வழக்கறிஞர் அன்பரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நடிகை குயிலி உள்பட 2 பேரும் ஆஜராகாததால் வழக்கை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிபதி சிவா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.