காங்கிரசுக்கும் ஒரு நடிகை கிடைத்தார்: காங்கிரஸுக்கு ஆதரவாக மும்தாஜ் பிரச்சாரம்!
வேலூர்: காங்கிரசுக்கு ஆதரவாக நடிகை மும்தாஜ் பிரச்சார பீரங்கியாக களம் இறங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. அதிமுக, திமுக ஆகியவை நடிகர், நடிகையர்களை களம் இறக்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் முதலில் கோலிவுட் ஆட்கள் யாரும் கிடைக்காமல் திணறியது.
பணக் கஷ்டத்தோடு வந்து மாட்டிய கார்த்திக்..
இந் நிலையில் காங்கிரஸ் பிரசாரத்திற்கு ஸ்டார் அந்தஸ்துள்ள ஆள் கிடைக்காத நிலையில் ரிட்டையர்ட் ஆட்களான கார்த்திக் மற்றும் நடிகை மும்தாஜை இழுத்து வந்துள்ளனர்.
கார்த்திக் பணக் கஷ்டத்தில் இருப்பதாகவும், அது தொடர்பாக சில உதவிகளை காங்கிரஸ் செய்ய முன் வந்துள்ளதாகவும் தெரிகிறது.
தமிழை தத்தி தத்தி பேசி...
இந் நிலையில் அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜேஷுக்கு ஆதரவாக ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் மும்தாஜ் பிரச்சாரம் செய்தார். அவர் தமிழை தத்தி தத்தி பேசியதை மக்கள் வித்தியாசமாக பார்த்தனர்.
மும்தாஜ் பேசுகையில், "நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர், தமிழக மக்களுக்கு உழைக்க வந்துள்ளார். இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி இவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்.
இனிமேலும் நடக்காமல் இருக்க...
காங்கிரஸ் கட்சி மதசார்பற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எந்த ஒரு மதக்கலவரமும் நடந்ததில்லை. இனிமேலும் நடக்காமல் இருக்க வேண்டுமானால் காங்கிரசுக்கு ஆதரவு தர வேண்டும்.
இந்திய நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளவர்கள் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்தியை பிரதமராக்க அனைவரும் பாடுபடவேண்டும்" என்றார்.
கூட்டம் அலைமோதியது..
தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து கொஞ்சிக்கொஞ்சி தமிழில் பேசிய மும்தாஜை பார்க்க இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. அரக்கோணம் பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ஆகிய இடங்களில் மும்தாஜ் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை பார்க்க மக்கள் சிலர் அப்பகுதிகளில் கூடியிருந்தனர்.
ஆனால் மும்தாஜோ கலவை, திமிரி ஆகிய பகுதிகளில் மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு திருத்தணி சென்றுவிட்டார்.