சிறையில் இருந்தபடி ரவுடி மிரட்டிய விவகாரம்... சென்னை கமிஷனரிடம் நடிகை ராதா நேரில் புகார்
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வைரம் தனக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா நேரில் இன்று புகார் அளித்துள்ளார்.
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் ராதா. தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், அடுத்தடுத்து அவரைப் படங்களில் பார்க்க முடியவில்லை. படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், காதல் விவகாரம், மிரட்டல் என தொடர்ந்து அவர் பெயர் ஊடகங்களில் அடிபட்டு வந்தவண்ணமே உள்ளது.
ஏற்கனவே, கடந்த 2013ம் ஆண்டு ராதா பைசூல் என்ற தொழில்அதிபர் ஒருவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதில், அவர் 'பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும்' கூறியிருந்தார்.
மேலும், தன்னை ஆபாசமாக அவர் படம் எடுத்து வைத்துள்ளதாகவும்' ராதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் ஒரு புறம் இருக்க, சில வாரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான முனிவேல் என்பவரின் மனைவியான உமாதேவி, நடிகை ராதா மீது போலீசில் புகார் அளித்தார். அதில் அவர், 'ராதா தன் கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும்' தெரிவித்திருந்தார். மேலும், கடந்த சில நாட்களாக தன் கணவரைக் காணவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், தன் மீதான இந்தப் புகாரை நடிகை ராதா மறுத்தார். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள பிரபல ரவுடி வைரம் தன்னை போன் மூலம் மிரட்டுவதாக ராதா ஆடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார். இது தொடர்பான ஆடியோ ஒன்றும் வாட்ஸ் ஆப்பில் வைரலாகப் பரவியது.
அந்த ஆடியோவில், 'என் பெயர் வைரம். நான் கந்துவட்டி தொழில் செய்கிறேன். தற்போது புழல் சிறையில் இருக்கிறேன். முனிவேலுடன் உனக்கு இருக்கும் தொடர்பை விட்டுவிட வேண்டும். என் பெயரை முனிவேலிடம் சொன்னாலே, உன் பின்னால் வரமாட்டார். ஓடி போய்விடுவார்.
நான் ரவுடியாக இருந்தாலும், நேர்மையாக நடப்பவன். பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். பிரச்சினையை பெரிதாக்க நினைத்தால் நீ இருக்க மாட்டாய். இப்படி நான் மிரட்டுவதை போலீசில் சொன்னாலும், கவலை இல்லை. உன்னை கொலை செய்கிற அளவுக்கு, நீ பெரிய ஆள் இல்லை. ஒரு சாதாரண நடிகை. என் மீது 16 வழக்குகள் உள்ளன. முனிவேலை நீ கல்யாணம் பண்ணிப்பார். நீ இருக்க மாட்டாய். முனிவேலும் இருக்க மாட்டார்' என ஆண்குரல் மிரட்டுகிறது. இதற்கு பதிலுக்குப் பதில் நடிகை ராதாவும் பேசுவது உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராதா, 'தனது காதல் விவகாரத்தில் ரவுடி வைரம் தலையிடுவதாக' குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'வைரத்தில் இந்த மிரட்டலால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், புழல் சிறையில் இருக்கும் ஒருவர் செல்போனில் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது' என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக செனை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் ராதா.
இது ஒருபுறம் இருக்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைரம் எப்படி செல்போனில் பேசினார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.