கணவர் இந்திரனுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்... சேர்த்து வையுங்கள் - நடிகை ரம்பா
தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தனது கணவர் இந்திரகுமாரை மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் எனவே அவருடன் சேர்த்து வையுங்கள் என்று நடிகை ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்க அவரைப் போல இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரைஉலகிற்கு கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் இயக்குநர்கள். டூப் போட வந்த விஜயலட்சுமி ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
சுந்தர் .சி இயக்கத்தில் கார்த்திக் உடன் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்களின் உள்ளத்தை அள்ளியதால் ரம்பாவிற்கு தமிழ் திரை உலகில் ஒரு முக்கிய இடம் கிடைத்தது.
ரம்பா திருமணம்
வாய்ப்புகள் படிப்படியாக குறையவே, இலங்கை தமிழரான இந்திரகுமார், 47 என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது 39 வயதாகும் ரம்பாவுக்கும், அவரது கணவர் இந்திரகுமாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரம்பா சென்னைக்கு வந்துவிட்டார். டிவி நிகழ்ச்சிகளிலும் தலை காட்டத் தொடங்கினார்.
நீதிமன்றத்தில் ரம்பா மனு
குடும்பத்தில் எதுவும் பிரச்சினையாக இருக்கும் என்று கோலிவுட் உலகம் கிசுகிசுக்கத் தொடங்கவே, நினைத்தது போல நேற்று குடும்ப நலக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் ரம்பா. உடனே ரம்பா விவாகரத்து கோரி தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் ரம்பாவோ, தனது கணவர் இந்திரகுமாரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளாராம்.
விளம்பர தூதர்
ரம்பா தனது மனுவில், இலங்கை தமிழரான இந்திரகுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடா நாட்டில் குடியேறினார். சிவில் இன்ஜினியரான அவர் கனடா நாட்டில் ‘மேஜிக்வுட்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் 2009ம் ஆண்டு கலைப்புலி தாணு மூலம் எனக்கு அறிமுகமானார். அப்போது தன் நிறுவனத்தின் விளம்பர தூதராக என்னை அறிவித்தார். இதற்காக எனக்கு பி.எம்.டபிள்யு. காரை அன்பளிப்பாக வழங்குவதாக அப்போது பத்திரிகைகளில் பேட்டி அளித்தார். ஆனால், அந்த கார் அவரது சகோதரர் தவக்குமார் பெயரில் தான் இதுவரை உள்ளது.
பெண் குழந்தை
நாங்கள் இருவரும் காதலித்து 2010ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டோம். இந்திரகுமாருக்கு 2000ம் ஆண்டு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அவரை 2003ம் ஆண்டு இந்திரகுமார் விவாகரத்து செய்துவிட்டார். இதை என்னிடம் முதலில் அவர் தெரிவிக்கவில்லை. கனடா நாட்டில் நாங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். எங்களுக்கு முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்று என் கணவரின் குடும்பத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால், 2011ம் ஆண்டு எங்களுக்கு லாண்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
கொடுமை படுத்திய கணவர்
இதனால் என் கணவரும், அவரது குடும்பத்தினரும் அதிருப்தியடைந்தனர். பெண் குழந்தை பிறந்ததால், இந்து முறைப்படி செய்ய வேண்டிய எந்த ஒரு சடங்குகளையும் அவர்கள் செய்யவில்லை. இந்த மனவருத்தத்தை சரிசெய்ய நான் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை.
அடித்து உதைத்தார். அவர்கள் தினமும் என்னை கொடுமைப்படுத்தினர். என் கணவர் தினமும் குடிபோதையில் வந்து என்னை சித்ரவதை செய்ய தொடங்கினார். என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் தன் பெயருக்கு எழுதி வைக்கவேண்டும் என்று கேட்டார். இதற்கு சம்மதிக்காததால் என்னை தினமும் அடித்து உதைத்தார்.
போலீசில் புகார்
இந்த கொடுமையை தாங்க முடியாமல் 2012ம் ஆண்டு போலீசுக்கு போன் மூலம் புகார் கொடுத்தேன். கனடா நாட்டு போலீசார் என் வீட்டிற்கு வந்து விசாரித்தனர். அப்போது போலீசில் உண்மையை சொன்னால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன். குழந்தையையும் உன்னிடம் இருந்து பிரித்துவிடுவேன் என்று என் கணவர் என்னை மிரட்டினார். இதனால் போலீசாரிடம் உண்மையை சொல்லாமல் மவுனமாக இருந்துவிட்டேன்.
குழந்தையை பிரித்தனர்
அதன்பின்னர் என்னை இந்தியாவுக்கு அனுப்ப என் கணவரின் குடும்பத்தினர் முயற்சித்தனர். 2012ம் ஆண்டு என் மகளை இந்தியாவுக்கு நான் கடத்தி செல்ல முயற்சிப்பதாக என் மீது டோரண்டோ போலீசில் என் கணவர் புகார் செய்தார். அதேபோல, கனடாவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என்னிடம் இருந்து என் குழந்தையை சிறிது காலம் பிரித்துவிட்டனர். பல்வேறு சட்ட போராட்டத்துக்கு பின்னர் என் மகளை மீட்டேன்.
2வது பெண் குழந்தை
பின்னர் சிறிது காலம் சந்தோஷமாக குடும்பம் நடத்தினோம். இதில் மீண்டும் நான் கர்ப்பம் அடைந்தேன். இந்த முறை ஆண் குழந்தை பிறக்கும் என்று மீண்டும் என் கணவர் குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், 2015ம் ஆண்டு மார்ச் மாதம் எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் மீண்டும் குடும்பத்தில் பிரச்சினை தொடங்கியது. என் கணவரின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் என்னை அசிங்கமாக பேசி கொடுமைப்படுத்தினர்.
இந்திரகுமார் ஆஜராக உத்தரவு
என் கணவரும் மீண்டும் குடிபோதையில் வந்து என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். தற்போது நான் சென்னை வந்துவிட்டேன்.
என் கணவருக்கு நல்ல மனைவியாக வாழ்ந்து இருக்கிறேன். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். ஆனால், அவர் என்னை விட்டு பிரிய திட்டமிடுகிறார். எனவே, என்னுடன் சேர்ந்து வாழ என் கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ரம்பா. இந்த மனுவை குடும்பநல நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்று இந்திரன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.