12 பேரிடம் ஆசை காட்டி ரூ.3 கோடி மோசடி செய்த ஸ்ருதி... குண்டர் சட்டம் பாய்ந்த பின்னணி
திருமணம் செய்து கொள்வதாக கூறி 12 ஆண்களிடம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாலேயே நடிகை ஸ்ருதி அவரது பெற்றோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கோவை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 12 பேரிடம் ரூ. 3 கோடி வரை மோசடி செய்த கோவையைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி குடும்பத்தினர் மூவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாமீனில் வெளிவந்து தப்பிவிடாமல் தடுக்கவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்கிற மைதிலி. கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த இவர், தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். சித்ராவின் தாயார் சொந்தமாக நடத்தி வந்த மேட்ரிமோனியல் வெப்சைட்டிலும் பதிவு செய்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என பதிவிட்டிருந்தார் ஸ்ருதி.
இது ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவரின் பார்வையில் பட்டது. இவர் தனது திருமணத்துக்காக வெப்சைட்டில் மணப்பெண் தேடி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டில் அவர் ஸ்ருதியின் ஜாதகத்தைப் பார்த்து பெண் கேட்டார். இவரது சொந்த ஊர் சேலம் எடப்பாடி அருகேயுள்ள காட்டுவலவு.
திருமணத்திற்கு சம்மதித்த ஸ்ருதி
அழகில் மயங்கிய அவர், ஸ்ருதியின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டார். ஸ்ருதியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இருவரும் சகஜமாக பழகவே இதை பயன்படுத்தி பாலமுருகனிடம் ரூ.41 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார். அவரது தாயார் சித்ரா ,48, தந்தை பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகியோர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
திருமண மோசடி வழக்கு
கடந்த ஜனவரி மாதம், கோவை குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி என்பவர் தலைமையிலான விசாரணை நடத்த சென்றபோது,காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக ஸ்ருதி குடும்பத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதில் திருமண மோசடி வழக்கில் தொடர்புடையதாக ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீண்டும் கைதான ஸ்ருதி
வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.43.5 லட்சம் பெற்றுக் கொண்டு ஸ்ருதி ஏமாற்றியதாக நாமக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற பொறியாளர் 2016ஆம் ஆண்டில் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஜாமினில் வந்திருந்த ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.
ரூ. 3 கோடி மோசடி
இதனிடையே தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், இதுபோல பலரிடம் ஸ்ருதி குடும்பத்தினர் மோசடி செய்து, போலி வங்கிக் கணக்கு மூலம் பண பரிவர்த்தனை செய்து வந்தது தெரியவந்தது.
சசிகுமாரிடம் ரூ.22 லட்சம், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்கமலிடம் ரூ.21 லட்சம், சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்த விஜய் உள்பட 12 பேரிடம் ஸ்ருதி திருமண ஆசை காட்டி ரூ.3 கோடி வரை சுருட்டியது தெரியவந்தது.
கோவை காவல்துறையினர் வழக்கு
கோவை துடியலூரைச் சேர்ந்த அனுபிரியா என்பவரது பெயரில் தொடங்கப்பட்ட அந்த போலி வங்கிக் கணக்கில் ரூ.1.3 லட்சம் இருப்பதும் கண்டறியப்பட்டது. வேலைவாங்கித் தருவதாகக் கூறி ஆவணங்களைப் பெற்று, அதன் மூலம் போலி வங்கிக் கணக்கை தொடங்கியதாக, அனுபிரியா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் மீது 5பிரிவுகளின் கீழ் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
வரிசை கட்டிய புகார்கள்
ஸ்ருதியிடம் ஏமாந்த பலரும் புகார் கொடுக்க யோசித்த நிலையில் பாலமுருகன் கொடுத்த புகாரை பின்பற்றி வரிசையாக பலரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். ஸ்ருதியிடம் ஏமாந்த கதையை கூறி பணத்தை இழந்ததையும் கூறி புகார் அளித்தனர். இவை அனைத்தும் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
ஸ்ருதி மீது குண்டர் சட்டம்
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ருதி குடும்பத்தினர் திருமண ஆசை காட்டி 12 பேரிடம் ரூ. 3 கோடி வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து வழக்குகள் பாயவே
மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையருக்கு குற்றப்பிரிவு போலீஸார் பரிந்துரைத்தனர்.
ஆசை காட்டி மோசடி
அதன்படி, 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவிட்டார்.தொடர் மோசடி வழக்குகளின் அடிப்படையில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு நகல்கள் சிறையில் உள்ள மூன்று நபர்களுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று பெரியய்யா கூறினார்.
மயக்கமான சித்ரா
இதனிடையே, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவதற்கான உத்தரவு வெளியானதும், கோவை மத்திய சிறையில் ஸ்ருதியின் தாயார் சித்ரா மயக்கமடைந்து விட்டாராம். உடனே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. அவருக்கு மயக்கம் தெளிந்த பின்னர் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
கோவை சிறையில் ஸ்ருதி
ஸ்ருதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டவர்களிடம், வீடு கடனில் இருக்கிறது, தாய்க்கு ஆபரேஷன் எனக்கூறி பணம் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துள்ளனர். 3 ஆண்டுகளாக மோசடி செய்து நகை, சொத்து வீடுகள் வாங்கியுள்ளனர். வங்கி லாக்கர்களில் பணம், நகை வைத்துள்ளனர். ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாகி விடாமல் தடுக்கவே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.