நடிகை திரிஷா பீட்டாவில் அவ்வளவாக இல்லை... இனி அதுவும் இருக்காது... தாய் உமா உறுதி
நடிகை திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று திரிஷாவின் தாய் உமா கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் பீட்டாவில் திரிஷா உறுப்பினராக இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.
சென்னை: நடிகை திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் உமா போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்துள்ளார். மேலும், படிப்பிடிப்பில் திரிஷாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர் என்ற குற்றச்சாட்டு நடிகை திரிஷா மீது எழுந்தது. ஜல்லிக்கட்டு எதிராக பீட்டா செயல்பட்டு வருவதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காரைக்குடியில் நடைபெற்று வந்த திரிஷாவின் படப்பிடப்பு தளத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ விரோதிகள் ஹேக் செய்து தவறான செய்திகளை வெளியிட்டு இருப்பதாகக் கூறி அவரது தாய் உமா கிருஷ்ணன், இன்று சென்னை கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திரிஷா பீட்டாவில் பெரிய அளவில் இல்லை. அவர் வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்காமல் தெரு நாய்களை எடுத்து வளர்க்க வேண்டும் என்று பீட்டா ஏற்பாடு செய்திருந்த விளம்பர படத்தில்தான் நடித்தார். அவ்வளவுதான். அதுகூட நீண்ட காலத்திற்கு முன்பு அதனை அவர் செய்தார். இவ்வளவு பிரச்சனை இருக்கும் என்று அப்போது தெரிந்திருந்தால் திரிஷா அதனை செய்திருக்க மாட்டார்.
நாங்களும் தமிழர்கள்தான். நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. மேலும், திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள். அவருக்கு நிறைய போட்டியாளர்களும், எதிரிகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இதனை செய்துள்ளனர். ஆனால் யாரென்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை.
திரிஷாவின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கான உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். இந்தப் பிரச்சனை குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடமும் பேசி இருக்கிறேன். அவரும் சென்னை வந்த உடன் பேசுவதாக உறுதி அளித்துள்ளார்.
இனி பீட்டா தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடு பட மாட்டோம் என்று உமா கிருஷ்ணன் கூறினார்.