ஜெ. சமாதியில் 'மாம்பழ படையல்' வைத்து அஞ்சலி செலுத்திய நடிகை விந்தியா!
நடிகை விந்தியா ஜெயலலிதா சமாதிக்கு சென்று மாம்பழங்களை படையலாக வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: அதிமுகவில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகை விந்தியா ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மாம்பழ படையல் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதா மீது அளவுகடந்த மதிப்பும் பிரியமும் வைத்திருந்தவர் நடிகை விந்தியா. அதிமுகவின் பிரசார பீரங்கியாக சூறாவளியாக சுழன்று வந்தவர் விந்தியா.
விந்தியாவை தேர்தல் காலங்களில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ஜெயலலிதாவும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலைவிட்டே ஒதுங்கிவிட்டார் விந்தியா.
விந்தியா அமைதி
அவரைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்கிற கருத்தில் உள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.
சமாதியில் அஞ்சலி
இந்த நிலையில்தான் இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு விந்தியா சென்றார். அப்போது ஜெயலலிதாவின் சமாதியில் மாம்பழங்களை வைத்து விந்தியா அஞ்சலி செலுத்தினார்.
மாம்பழ தோட்டம்
விந்தியாவுக்கு ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் 200 ஏக்கரில் மாம்பழ தோட்டம் உள்ளது. இந்த மாம்பழங்களை ஜெயலலிதாவுக்கு ஆண்டுதோறும் விந்தியா அனுப்பி வைப்பார். ஜெயலலிதாவுக்கு விந்தியா தோட்டத்து மாம்பழங்கள் ரொம்பவே பிடித்து போயிருந்ததாம். இத்தகவல்களை பூங்குன்றன் மூலம் விந்தியாவுக்கு சொல்ல சொல்வாராம் ஜெயலலிதா.
மாம்பழ படையல்
இதன் நினைவாகத்தான் இன்று ஜெயலலிதாவுக்கு மாம்பழங்களை படையலாக வைத்து விந்தியா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விந்தியா, விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பேன் என்றார்.