பௌர்ணமிக்கும் பதஞ்சலிக்கும் என்ன சம்பந்தம்? மல்யுத்த வீராங்கனைகளை விமர்சித்தவரை வெச்சு செஞ்ச நடிகை
சென்னை: பாஜக எம்பிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை விமர்சித்தவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை வினோதினி வைத்தியநாதன்.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள மல்யுத்த வீராங்கனை மாதக் கணக்கில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது அதை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
ஒலிம்பிக், சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் கைது செய்யப்படும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் ட்விட்டரில் ஒருவர், "அரசின் விருதுகள், சலுகைகள் அனைத்தையும் பெற்று அனுபவித்தபின் விழித்துக்கொண்டார்களா? ஏன் அவர்கள் விருதுகளை நிராகரிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனை ரீட்வீட் செய்து பதிலளித்து உள்ள பிரபல தமிழ் நடிகை வினோதினி. அதில், "எந்தவித அரசியல் நிலைப்பாடும் இல்லாமல் சொல்கிறேன். நான் பள்ளியில் ஒரு லெமன் அண்டு ஸ்பூன் ரேஸில் ஓடி பங்களிப்பு சான்றிதழ் வாங்கியிருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த போட்டியை நடத்திய பிடி மாஸ்டர் பொறுக்கியென்று வைத்துக்கொள்வோம்.
போட்டி நடப்பதற்கு முன்னால் என்னிடம் ஒரு ஆட்டத்தை ஆட முயற்சித்திருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அட மூதேவி சனியனே என்று சபித்துக்கொண்டே நானும் போட்டியிட்டேன் என்று வைத்துக்கொள்வோம். மேடையில் எனக்கு சான்றிதழ் கொடுக்கிறார்கள். அந்த தளத்தில் மௌன ராகம் கார்த்திக் போல தீடீர்னு மைக்கைப்பிடித்து, இவன் ஒரு நாரப்பய என்று சொல்ல தைரியமோ திராணியோ இல்லை என்று வைத்துக்கொள்வோம்.
வீட்டிற்கு வந்ததும் பெற்றோரிடம் சொல்கிறேன், அல்லது பல மாதங்கள் கழித்து அம்மாவோடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டிருக்கும் ஒரு இரவு காதில் சொல்லி அழுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள், இரு அந்த கருமம் புடிச்சவன கிழிச்சுத்தொங்க விடுறேன் என்று கூறி பிரச்சனையை என் பள்ளிக்கூட பிரின்ஸிபலிடம் எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
எல்லோரும் எனக்கு நடந்த அத்துமீறலைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்க, ஒருத்தன் மட்டும் வந்து, அந்த பங்களிப்பு சான்றிதழை திருப்பிக்கொடுன்னு கேட்டா... அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னடா சம்பந்தம், பௌர்ணமிக்கும் பதஞ்சலிக்கும் என்னடா சம்பந்தம்னு தோணுமா தோணாதா? எதுனாலும் லைன்ல வந்து ரிப்ளை பண்ணுங்க.
எங்க வீட்டு பிகாரி சமையர்காரர் பராத்தா செய்திருக்கிறார். பிரிஜ்ஜு(ல) (வெச்ச) பூஷனிக்காவ கொண்டு ஏதோ குர்மாவும் செய்திருக்கிறார். ஒரு டீயையும் ரெடி பண்ணிவிட்டு உங்க காமெண்டுகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். லெமன் அண்டு ஸ்பூன் ரேஸும் தேசிய அளவிலான போட்டியும் ஒண்ணானுலாம் கேக்கக்கூடாது. லெமன் அண்ட் ஸ்பூன் விளையாட்டை குறைத்து மதிப்பிடாதீர்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.