2 ஆண்டுகளுக்குப்பின் அடவிநயினார் நீர்த்தேக்கம் நிரம்பியது... நெல்லை மக்கள் மகிழ்ச்சி
2 ஆண்டுகளுக்குப்பின் அடவிநயினார் நீர்த்தேக்கம் நிரம்பி அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது.
நெல்லை: 2 ஆண்டுகளுக்குப்பின் அடவிநயினார் நீர்த்தேக்கம் நிரம்பி அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக அங்கு கனமழை பெய்து வந்ததை அடுத்து இந்த நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.
அடவிநயினார் அணைக்கட்டு 132 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் சுமார் 7500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
அணையில் இருந்து வடகரை, அச்சன்புதூர், கணக்கப்பிள்ளை வலசை, இலத்தூர், குத்துக்கல் வலசை, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை, சுரண்டை, சீவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது.கடந்த 10 நாட்களில் 100அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வனப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக வேகமாக நிரம்பிய நிலையில் 120 கன அடியாக உயர்ந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை 5 மணி வரை பெய்த கன மழையினால் ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் 130அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் நிரம்பி வழிய 2 அடி மட்டுமே குறைவாக இருந்த நிலையில் நேற்றுமாலை வனப்பகுதியில் நீடித்த கனமழையினால் நேற்று 132 அடியை எட்டியது.
2 ஆண்டுகளுக்குப்பின்னர் அணை நிரம்பியதால் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியான வடகரை,பண்பொழி,உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தை காண திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
வாலிபர்கள் அணையின் நீரோடியில் நின்று ஆபத்தை உணராமல் ஆனந்தமாக குளித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்ற்றனர்.கால்வாய்களில் வெள்ளம் உருவாகியுள்ளது.அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி நீர்வரத்து இருந்தது.
அணையிலிருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வனப்பகுதியில் விட்டுப் விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்