அப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு!
ஆறுமுகசாமி கமிஷனில் தம்மையும் மனுதாரராக சேர்க்கக்கோரி தீபா மனு அளித்துள்ளார்.
சென்னை: ஆறுமுகசாமி கமிஷனில் தம்மையும் மனுதாரராக சேர்க்கக்கோரி தீபா மனு அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சசிகலா, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆறுமுக சாமி கமிஷன் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் சம்மன் அனுப்பி வருகிறது விசாரணை ஆணையம்.
பரபரப்பை கிளப்பிய தீபா
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்களின் கவனத்தை பெற்ற அவரது அண்ணன் மகள் தீபா, தனது அத்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
ஆட்சியாளர்களும் உடந்தை
தனது அத்தை மரணத்திற்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என பகீரங்கமாக குற்றம்சாட்டினார் தீபா. பின்னர் தமிழக ஆட்சியாளர்களும் உடந்தை எனக்கூறி பீதியை கிளப்பினார்.
அப்பல்லோவில் ஆய்வு
இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி வரும் 29ஆம் தேதி அப்பல்லோவில் ஆய்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்னையும் கூட்டிட்டு போங்க
இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தம்மையும் மனுதாரராக ஏற்க ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மனு அளித்துள்ளார். அப்பல்லோவில் விசாரிக்க செல்லும்போது தம்மையும் அழைத்து செல்லுமாறு தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.