சென்னையில் பஸ்கள் நிறுத்தம்.. கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து மக்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வில்லிவாக்கம், அயனாவரம், பனிமனைகளில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கோயம்பேடு, கோயம்பேடு, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் ஓடவில்லை.
பேருந்துகள் இயக்கப்படாததால் வாடகை கார், ஆட்டோவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை மக்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். சென்னை கடற்கரை -வேளச்சேரி மார்க்கம், சென்னை கடற்கரை - ஆவடி - திருவள்ளூர் மார்க்கம் மற்றும் சென்னை கடற்கரை - ஆவடி - பொன்னேரி மார்க்கத்திற்கும் நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.