சட்டசபைத் தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதல் துணை ராணுவம்: டெல்லியில் கேட்ட ராஜேஷ் லக்கானி
டெல்லி: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சுமார் 300 கம்பெனி துணை ராணுவத்தினரை தேர்தல் ஆணையம் அனுப்ப உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கும் கூடுதலாக துணை ராணுவத்தினரை தலைமைத் தேர்தல் ராஜேஷ் லக்கானி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். அதிமுக, பாஜக தவிர வேறு எந்த பிரதான கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இதுவரை இரண்டு முறை தமிழகத்துக்கு வந்து, தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.சென்னையில் சமீபத்தில் அரசியல் கட்சிகளை நசீம் ஜைதி சந்தித்துப் பேசினார். அப்போது ஓட்டுக்காக பணம் கொடுக்கும் நடவடிக்கையை தடுக்கவேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நஜீம் ஜைதி, மே மாத முதல் வாரத்தில் இருந்து, பறக்கும் படையில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். அதுபோல் துணை ராணுவத்தினரும் அதில் இடம்பெறுவார்கள். இதன் மூலம் பறக்கும் படையின் நடுநிலைத்தன்மை மீது சந்தேகம் எழாமல் பார்த்துக்கொள்ளப்படும். பறக்கும் படையின் எண்ணிக்கையும் உயர்த்தப்படும் என்று கூறினார்.
இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பின் பேரில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தமிழக தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஆபாஷ்குமார் ஆகியோர் நேற்று அவசரமாக டெல்லி சென்றனர். டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்களுடன் நேற்று காலை மற்றும் மாலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராஜேஷ் லக்கானி மற்றும் ஆபாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தேர்தல் துணை ஆணையர் சந்தீப் சக்சேனா உள்பட முக்கிய அதிகாரிகளை ராஜேஷ் லக்கானி நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தக்கூட்டத்தில், பதற்றமான வாக்குச்சாவடிகள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பறக்கும் படையின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு ஆரம்பத்தில் சுமார் 300 கம்பெனி துணை ராணுவத்தினரை அழைக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கும் கூடுதலாக துணை ராணுவத்தினரை ராஜேஷ் லக்கானி கேட்டுள்ளதாக தெரிகிறது.