ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கூடுதல் துணை ராணுவப் படை வீரர்கள் இன்று வருகை
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் துணை ராணுவப்படை வீரர்கள் இன்று வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
எனவே, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப் பட்டு வருகின்றன. ஏற்கனவே, கடந்த 18ம் தேதி 360 துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக ஆர்.கே.நகர் வந்து சேர்ந்தனர். தற்போது அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை, ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக 2 ஆயிரத்து 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், உரிமம் பெற்ற 31 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தவிர குற்றவியல் நடைமுறைச் சட்ட தடுப்புப் பிரிவின் கீழ் 188 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிணையில் வெளிவரமுடியாத 86 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆறு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மேலும் பாதுகாப்பை தீவிரப் படுத்தும் நடவடிக்கையாக கூடுதல் துணை ராணுவப் படையினர் இன்று ஆர்.கே.நகர் வருகின்றனர்.