மாயமான விமானம்.. தேடுதலில் கூடுதல் படைகள்.. கடலில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பரபரப்பு
சென்னை: தமிழக கடல் பகுதியில் காணாமல் போன இந்தியக் கடலோரக் காவல் படையின் குட்டி விமானம் குறித்த தேடுதல் முடுக்க விடப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையிலான படையினருடன் கூடுதல் படையினரும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் கடலில் தெரிந்த எண்ணெய் படலத்தால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எண்ணெய் படலத்தை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் பிஸ்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி இரவு கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான டோர்னியர் விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த விமானம் திடீரென்று மாயமானது.
இதையடுத்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. பல்வேறு சந்தேகம் எழுந்ததால் அதற்கேற்ப தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. புதுச்சேரி அருகிலும், கடலூர் அருகிலும், பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் பிஸ்த் சென்னை வந்தார். அங்கு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விமானம் காணாமல் போனது குறித்து சந்தேகத்துக்கு இடமான இடங்களில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையுடன் இணைந்து தேடி வருகிறோம். ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. விரைவில் ஏதாவது ஒரு தடயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நடுக்கடலில் ஓர் இடத்தில் எண்ணெய் படலம் மிதப்பதை கண்டுபிடித்து உள்ளனர். அந்த எண்ணெய் படலத்தை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவில் ஏதாவது தெரிய வரும்.
மாயமான விமானத்தில் பயணித்த அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களிடம் தேடுதல் வேட்டைக்கு சிறிது காலம் ஏற்படலாம், நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டேன்.
தேடுதல் வேட்டையும் எளிதானது அல்ல. ஒரு சில கடல் பகுதிகளில் பிரச்சினைக்குரிய இடங்கள் உள்ளன. குறிப்பாக 600 முதல் 700 மீட்டர் ஆழம் கொண்ட பகுதிகளும் உள்ளன. இதனால் கண்டுபிடிக்கும் நேரத்தை சரியாக கூற முடியாது. ஆனால் கண்டுபிடிக்கும் வரை எங்களின் தேடுதல் வேட்டை தொடரும்.
விபத்துக்கான காரணத்தை உறுதியாக சொல்ல முடியாது. மூத்த விமானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இவர்களுடைய விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும். குறிப்பாக எந்திர கோளாறு காரணமா அல்லது வேறு எதாவது காரணமா என்று விசாரணையில் தெரியும் என்றார் அவர்.
சைலேந்திரபாபு தலைமையில்
இதற்கிடையே கடலோரக் காவல் படை கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் செயல்பட்டு வரும் தேடுதல் படையுடன் கூடுதலாக சிலரும் இணைந்துள்ளனர்.