புறநகர் ரயில்களில் குற்ற செயல்கள் இனி நடைபெறாது.. ஏடிஜிபி சைலேந்திரபாபு நம்பிக்கை
ஏடிஜிபி சைலேந்திர பாபு ரயில்நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: ரயில்களில் நகை, பணம் பறிப்பு, மாணவர்கள் ஆயுத மோதல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட குற்ற செயல்கள் இனி நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே காவல்துறை கூடுதல் இணை இயக்குனர் சைலேந்திரபாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தில் உயிர் இழக்கும் உடல்களை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திற்கு செல்வதால் காலதாமதமாவதால் பொன்னேரி கும்மிடி பூண்டி பகுதிகளில் ரயில்வே புற காவல் நிலையம் அமைக்க ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளித்திருந்திருந்தனர்.
அதன்படி, அதற்கான இடத்தை தேர்வு செய்ய ரயில்வே காவல்துறை கூடுதல் இணை இயக்குனர் சைலேந்திரபாபு மீஞ்சூர் பொன்னேரி கும்மிடிபூண்டி ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா, உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார்.
ரயில்நிலைய ஆய்வுகளுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, ரயில் நிலையங்களில் மாணவர்கள் ஆயுதங்களுடன் ரயில்களில் மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பயணிகள் பாதுகாப்புக்கு ரயில்களில் கூடுதல் காவலர்களைப் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.
முன்னதாக, பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்வே ஏடிஜிபி சைலேந்திர பாபு, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணம் செய்தார். அப்போது பயணிகளிடம் பாதுகாப்புக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என கருத்துக்களைக் கேட்டறிந்தார்.