மயான பூமி ஆக்கிரமிப்பு.. கோவை கலெக்டரிடம் டான்ஸ் ஆடியபடியே மனு அளித்த பழங்குடியினர்!
ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கோவை ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர்.
Recommended Video
கோவை: பொள்ளாச்சி பகுதியில் மலைவாழ் மக்களின் மயானத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் எனவே உடனடியாக அதனை அகற்ற வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசை வாத்தியங்களுடன் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள மணக்கடவு என்னும் இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் இவர்களுக்காக மயான பூமியும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த மயான இடத்தை சிலர் ஆக்கிரமித்ததாகவும் இதனால் தங்களால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியவில்லை எனவும் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசை கருவிகள் வாசித்து , பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடிய படி நூதனமுறையில் மனு அளித்தனர். தற்போது மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.