நாடுமுழுவதும் ஒற்றைக்கலாச்சாரத்தை திணிக்கும் பாஜகவின் முயற்சி பலிக்காது : தமீமுன் அன்சாரி பாய்ச்சல்
நாடு முழுவதும் ஒற்றைக் கலாச்சாரம் திணிக்கப்படுவதாக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டம் மூலம் ஒற்றைக் கலாச்சார முறையை பாஜக திணிக்க முயற்சிப்பதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பிற்கு எதிராக கேரளா, மேகாலயா, புதுச்சேரி சட்டமன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. பாஜக ஆளும் கோவா மாநிலத்திலும் மாட்டிறைச்சி தடைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் இன்று தனி நபர் தீர்மானம் கொடுத்தேன், இதே போன்று தமிழக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைகள் தலைவர் கருணாஸ் உள்ளிட்டோரும் இந்த கோரிக்கையை முன் வைத்தனர். தனிநபர் தீர்மானத்திற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை.
ஒற்றைக்கலாச்சாரம் திணிப்பு
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசிற்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும். நாடு முழுவதும் இருக்கும் இரட்டை கலாச்சாரத்தை அழித்து பாஜக அரசு ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க நினைக்கிறது. அதை தமிழக மக்கள் ஒரு காலத்திலும் ஏற்கப்படாது
விவசாயிகள் பாதிப்பு
25 ஆயிரம் விற்கப்பட்ட மாடு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கவில்லை.கறவை இல்லாத மாடுகளை வளர்க்க விவசாயிகள் துயரப்படுகின்றனர். விவசாயத்தை பாதுகாக்கவும், கால்நடை பராமரிப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மேலும் மாட்டுக்கறியை விரும்பி உண்ணும் மக்களின் உணவு உரிமையில் தலையிடும் இந்த சட்டத்தை நிறைவேற்றப் கூடாது என்பதே எங்களின் விருப்பம்.
தனிச்சட்டம் வேண்டும்
தனிச்சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் முடிவு, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இன்று வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம், என்றும் தமீமன் அன்சாரி தெரிவித்தார்.
தோழமை கட்சிகள் வெளிநடப்பு
மாட்றைச்சி தடைக்கு எதிராக திமுக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதே போன்று அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோரும் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து அரசின் பதில் திருப்தியளிக்காததால் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.