ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதா? அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கொந்தளிப்பு!
ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் குறித்து அவர் எந்த பதிலும் கூறாதது ஏன் என்று அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை : ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பது ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம் என்று அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்ட தினம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஊர்வலங்களாக நடத்தப்படுகின்றன. இதன்படி மதுரையில் அக்டோபர் 8ம் தேதி காலை 5 மணியளவில் மதிச்சியம் இராமராயர் மண்டபத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பார் என்று விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமும் அன்சாரி உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழக அமைச்சர் தொடங்கி வைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மூவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் தொடங்கி வைப்பதாக செய்யப்படும் விளம்பரத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மறுப்பு தெரிவிக்காதது ஏன் என்று கேட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைப்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம் என்றும் அவர்கள் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.