சசிகலாவை ஆதரித்த கையோடு முதல்வரை பார்த்த மூவர் அணி.. பேரறிவாளன் பரோலுக்கு நன்றி
ராஜீவ் கொலையில் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுத்திருப்பதற்கு தமிழக அரசுக்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சென்னை : பேரறிவாளனை பரோலில் விட்டதற்கு முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பேரறிவாளன் சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாயர் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கடந்த சட்டசபை கூட்டத்தின் போது தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் கொடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் ஜோலார்பேட்டை அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். இது குறித்து அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் கூடி ஆலோசித்தனர்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பேரறிவாளனை பரோலில் விடுவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து அவர்கள் ஆலோசித்தாக தெரிகிறது.
ஏனெனில் இந்த சந்திப்பிற்கு முன்னர் எம்எல்ஏக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் தரப்பை அழைத்து முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே இது குறித்தும் முதல்வரிடம் அவர்கள் எடுத்துக் கூறுவார்கள் என்று தெரிகிறது.