அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு 15 தொகுதிகள் ?
சென்னை: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தற்போதைய அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் அளவுக்கு த.மா.கா.வுக்கு பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் தான் த.மா.கா இடம் பெறும் என்று ஜி.கே.வாசன் தொடர்ந்து கூறிவந்தார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தமாகா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை காட்டிலும் கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்று போட்டியிடலாம் என தமாகா கணக்கு போட்டது. ஆனால் அதிமுக தரப்போ குறைந்த அளவே தொகுதிகளை ஒதுக்குவதாகவே கூறிவந்தது.
வாசனும் 25 தொகுதிகளில் இருந்து பின்வாங்காமல் முனைப்பாக இருந்து வந்தார். ஆனால் அதிமுகவோ 8 தொகுதிகளைத் தருவதாக சொன்னதாகவும் அதனால் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணையலாம் எனக் கூறப்பட்டு வந்தது.
அதேவேளை திமுகவும் தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தமாகா இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடந்த தீவிர பேச்சுவார்த்தையின் முடிவில் தமாகாவுக்கு இன்று இரவு 15 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தற்போதைய அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதாவை ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாக தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.