சாரணர் இயக்கத் தலைவர் ராஜாவா.. பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்காதீர்...அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள்
சாரண சாரணியர் அமைப்புக்கு எச். ராஜாவை நியமிக்க முயற்சிப்பது பிஞ்ச நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் செயல் என்று தமிழக அரசுக்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : பள்ளி மாணவர்களின் சாரண சாரணியர் அமைப்பிற்கு பாஜகவின் எச். ராஜாவை நியமிப்பது பிஞ்ச நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் செயல் என்று அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ,மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல்பட்டு வரும் சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும்,தமிழர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவருமான எச்.ராஜாவை தலைவராக்க அரசு முயற்சிக்கிறது.
இந்தச் செயலை தமிழக முதல்வர் பழனிசாமியும்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அதற்காக கல்வித்துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கினறன.
சமூக நீதி
தமிழகம் சமூக நல்லிணக்கம்,சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாக திகழ்ந்து வருகிறது. அதுவும் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ-சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது.
அதிர்ச்சி
அப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வுகள் நிறைந்திருக்கும் தமிழகத்தில்,சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசிவரும் எச்.ராஜாவை தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்க முடியாது
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் நாசகார செயலில் ஈடுபடுவது கடும் வேதனையளிக்கிறது. இதை ஏற்கவே முடியாது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது போன்ற பொறுப்புகளுக்கு சகிப்புத்தன்மையும்,பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பரந்தமனமும், தூரநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரையே கொண்டு நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வேண்டுகோள்
இந்த பொறுப்புக்கு எச்.ராஜாவை கொண்டு வரும் முயற்சியை கைவிட்டு, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அம்மா வழியில் முடிவுகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக் கொள்கிறோம். இந்த அறிக்கையை தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.