ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம்.. எடப்பாடி மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
சர்க்கரை விலைஏற்றத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன்
சென்னை : நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு உயர்த்தியதைக் கண்டித்து அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், இந்த ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை 13 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு. மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு மட்டுமே பழைய விலைக்கு சர்க்கரை கிடைக்கும் என்றும் உத்தரவிட்டது.
இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். தி.மு.க., ம.தி.மு.க ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன. இந்நிலையில் இந்த உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாய விலைக் கடைகளில் சர்க்கரையின் விலை கிலோவுக்கு 13.50 ரூபாய் என்ற அளவில் வழங்கப்பட்டுவந்த நிலையில், இரண்டு மடங்கு விலையை உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் ரேஷன் அட்டைகளைத் தவிர மற்ற அட்டைகளுக்கு இந்த விலை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்கள் விரோத அரசு என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. நவம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலையை உயர்த்தியுள்ளதன் மூலம், நியாய விலைக் கடையின் நோக்கத்தை சீரழித்துள்ளது.
நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென், தெற்காசியாவிலேயே தமிழகத்தைப் போல ரேஷன் அமைப்புகள் வேறெங்கும் இல்லை என்று கூறினார். ஆனால், இன்று இந்த விலை உயர்வினால் சாமானியமும் தூற்றக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. எனவே, மக்களின் மனநிலை உணர்ந்து சர்க்கரை விலை உயர்வை எடப்பாடி அரசு திரும்பப்பெற வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களை மறந்து ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி அரசை மக்கள் விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். எடப்பாடிக்கு பதவி தான் முக்கியம் மக்கள் அல்ல என்பது புலனாகிறது என்று அந்த அறிக்கையில் தினகரன் தெரிவித்து உள்ளார்.