அதிமுக அம்மா... அதிமுக இபிஎஸ், அதிமுக தினகரன் என இரண்டாக உடைந்தது!
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்களின் அதிரடி பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி அணியை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெயலலிதா மறைந்ததையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாகப் பிரிந்தது.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14ம் தேதி சிறைக்கு சென்றதையடுத்து தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் சசிகலா தந்தார்.
பதவிஆசை காரணமாக தன்னிச்சையாக செயல்பட்ட தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் சசிகலா மற்றும் இதர உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி தன்னை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதாக தற்போது சிலர் தகவலை கசியவிட்டு வருகின்றனர்.
வெற்றிவேல் எதிர்ப்பு
இது ஒருபுறமிருக்க நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற கூட்டத்தை விமர்சித்து சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று காலை பேட்டியளித்தார். மேலும் துணைப் பொதுச்செயலாளருக்கு தெரியாமல் கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.
அதிமுக இபிஎஸ் அணி
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கட்சியை காப்பாற்றுவதற்காக சசிகலாஅணியை விலக்கி வைப்பதாக அறிவித்தார். இதனால் அதிமுக அம்மா அணியும் தற்போது பிளவுபட்டு அதிமுக இபிஎஸ்அணி, அதிமுக தினகரன் அணி என பிரிந்து கிடக்கிறது.
அதிமுக 3வது அணி
அதிமுக அமைச்சர்கள் முடிவு கண்டிக்கத்தக்கது என்று கூறி வரும் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தலைமையில் அதிமுக தினகரன் அணி உருவாகும் என்று தெரிகிறது. இந்த அணியில் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் சிலரும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜயபாஸ்கர் எந்த அணியில்
வருமான வரி சோதனைக்கு ஆளானாலும் தினகரன் ஆதரவால் தொடர்ந்து பதவியில் நீடித்து வரும் அவரின் தீவிர விசுவாசியான டாக்டர். விஜயபாஸ்கரும் இந்த அணியில் இருப்பார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.