பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம்: நாஞ்சில் சம்பத் 'பொளேர்'
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தற்கொலைக்குதான் சமம் என்று தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் ஒரே போடாக போட்டுள்ளார்.
சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என சசிகலா கோஷ்டியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் இரண்டுமே பாஜகவுடன் நெருக்கமாக இருக்கின்றன. இரு கோஷ்டிகளுக்கு இடையே பாஜக கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என்பது திமுகவின் குற்றச்சாட்டு.
ஓபிஸ் க்ரீன் சிக்னல்
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவெடுப்போம் என்றெல்லாம் ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிடுகிறார். இபிஎஸ் கோஷ்டியோ ஜனாபதி தேர்தலில் நாங்கள் உங்கள் வேட்பாளரை ஆதரிப்போம் என உறுதி தருகிறது.
பாஜக மீது பாய்ச்சல்
இந்த நிலையில் சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத், பாஜக வேறு- அதிமுக வேறு என விவரித்திருந்தார்.
ஸ்டாலினுக்கு ஆதரவு
அத்துடன் பாஜகவும் அதிமுகவும் சித்தாந்த ரீதியிலான ஒன்று என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதையும் கடுமையாக விமர்சித்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதை அதாவது இரு கோஷ்டிகளுக்கு இடையே பாஜக கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என்பது உண்மைதான் எனவும் கூறியிருந்தார்.
ஊடுருவல் முயற்சி
மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதன் மூலம் அதிமுகவுக்குள் ஊடுருவ பாஜக முயற்சிக்கிறது. ஆனால் இது சமூக நல்லிணக்க பெரியாரிய மண். இங்கே பாஜக மீது இயல்பாகவே வெறுப்புணர்வு இருக்கிறது. அவர்களால் இங்கே கால்பதிக்க முடியாது எனவும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
தற்கொலைக்கு சமம்
அத்துடன் எதிர்காலத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமையுமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்படி வைத்தால் அது தற்கொலை- ஏற்கனவே ஜெயலலிதா காலத்திலேயே இப்படி ஒன்று நடந்ததது எனவும் சுட்டிக்காட்டினார் நாஞ்சில் சம்பத்.