ஸ்ரீரங்கம்: பாஜகவினருடன் அதிமுகவினர் மோதல்.. சாலை மறியல்... சிபிஎம் வேட்பாளர் மீதும் தாக்குதல்!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது அதிமுக - பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் உருவானது. ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் பாஜக தொண்டர்கள் சிலர் காயமடைந்தனர்.
தங்களை தாக்கிய அதிமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக, தேமுதிக தொண்டர்கள் ராஜகோபுரம் பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பதிலுக்கு அதிமுகவினரும் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கும் பதற்றம் எழுந்துள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக வாக்கு வேட்டை
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால் தேர்தல்களம் விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக அமைச்சர்கள் பலர் வாக்கு சேகரித்தனர்.
செந்தில் பாலாஜி
அமைச்சர் தோப்பூர் வெங்கடாசலம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேற்று வாக்கு சேகரித்தனர்.
திமுகவினர் சுறுசுறுப்பு
இதேபோல், திமுக வேட்பாளர் ஆனந்தனுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, முன்னாள் எம்எல்ஏக்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேற்கொண்டனர்.
பாஜகவினர் வாக்கு சேகரிப்பு
இன்று காலையில் அம்மா மண்டபம் சாலையில் பாஜக வேட்பாளர் சுப்ரமணியத்திற்கு வாக்களிக்க கோரி தேமுதிகவினரும், பாஜகவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அங்கு ஏராளமான அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். அப்போது இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாக்குதல்
இரு கட்சியின் தொண்டர்களும் தங்களின் கைகளில் வைத்திருந்த கொடிகளின் கம்புகளினால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்தப்பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. இதனையடுத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். ஆனால் வழக்குப் பதிவு எதுவும் செய்யவில்லை.
சாலைமறியல்
இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்யக் கோரி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் பாஜகவினரும், தேமுதிகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிப்பு
இதற்கு பதிலடி தரும் விதமாக தேமுதிகவினரை கைது செய்யக் கோரி அதிமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஸ்ரீரங்கத்தில் பதற்றம் உருவானது. இதனையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் மீது தாக்குதல்
இதனிடையே ஸ்ரீரங்கம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை இன்று தனது கட்சித் தொண்டர்களுடன் கம்பரசன் கோட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மோதலாக மாறவே வேட்பாளர் அண்ணாதுரையை அதிமுகவினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் அண்ணாதுரை காயமடைந்துள்ளார். இதனையடுத்து தாக்கிய அதிமுகவினரை கண்டித்து கம்பரசன் கோட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.