அழகிரிக்கு துண்டு வீசும் பாஜக.. அதிமுக.. காரணம் பாசமா, 10,000 தொண்டர்களா??
அழகிரியை பாஜக, அதிமுக தங்கள் வசம் இழுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
சென்னை: அழகிரிக்கு நூல் விட துவங்கியுள்ளது அதிமுக!! துண்டு விரிக்க துவங்கியுள்ளது பாஜக!!
அழகிரிக்கு பேரணி ஏற்படுத்தியது ஒரு மாபெரும் சறுக்கல், பின்னடைவு, தோல்வி என்று ஊடகங்கள் பேசி வருகின்றன. இந்நிலையில், பேரணியின் முடிவினால், அழகிரிக்கு பல வாய்ப்புகளும், கதவுகளும் திறந்து விடப்பட்டு வருகின்றன.
நோ கமெண்ட்ஸ்
பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்பட்டு, பின்னர் அமைதியாக பேரணி நடைபெற்று முடிந்தாலும் தன் நிலைப்பாடு குறித்து எதையாவது கடைசியில் அழகிரி பேசிவிட்டு போவார் என்று பார்த்தால், அது டுமில் ஆகிவிட்டது. திமுக வட்டாரத்திலாவது இதுகுறித்து கருத்து, விமர்சனம், வரும் என்று பார்த்தால் அங்கேயும் அமைதியை தவிர வேற ஒன்றையும் காணோம். "பேரணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று துரைமுருகனிடம் கேட்டததற்கு ரஜினியின் ஃபேவரேட் வார்த்தையான "நோ கமெண்ட்ஸ்" என்று மட்டும் சொன்னார் அவர்.
அரசியல் மாற்றம்
ஆனால் பேரணியின் சோக முடிவு, இப்போது இரண்டு பக்க வாசலை அழகிரிக்கு திறந்து விடஆரம்பித்துள்ளது. முதல் வாசல், பாஜக உடையது. பேரணி குறித்து முதல் ஆளாக கருத்து தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். "அழகிரி நடத்திய பேரணி மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு அடிகோலாக உள்ளது" என்று வாய்கூசாமல் கூறினார். அதே நேரம் எந்த கட்சியையும் உடைக்கும் நோக்கம், தங்கள் கட்சிக்கு இல்லை என்றும் சேஃப்டிக்கும் சொல்லிக் கொண்டார். பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூறியதுமே அழகிரிக்கு சந்தோஷமாக இருந்ததோ இல்லையோ, அதிமுக தரப்பு ஆடிப்போய்விட்டது. நமக்கு பாஜக ஆதரவு இல்லையோ? என்று யோசிக்கவும் வைத்துவிட்டது.
ஒரே கல்லில் 2 மாங்காய்
இதற்கு அடுத்தாற்போல், அதிமுக தரப்பில் கதவு திறக்கப்பட்டுள்ளது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், மு.க. அழகிரியின் பேரணி குறித்த செய்திகள் வெளிவராமல் மறைப்பதற்கு தி.மு.க. மற்றும் பி.ஜே.பி.யால் மேற்கொள்ளப்பட்டதுதான் சி.பி.ஐ.சோதனை என்று சொன்னார். தம்பிதுரையின் இந்த வரிகளில் 2 விஷயங்கள் பொதிந்துள்ளது. ஒன்று, அழகிரியை தங்கள் பக்கம் இழுத்து கொள்வது, மற்றொன்று, பாஜக பக்கம் அழகிரி சாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக பாஜக மீது பழியை போடுவது என்று விவரமாகவே காய் நகர்த்தினார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழ வைக்க தம்பிதுரை தன் பங்குக்கு முயற்சி செய்தார்.
செல்லூர் ராஜு 'ஐஸ்'
அடுத்ததாக, அமைச்சர் செல்லூர் ராஜூ!! "பல வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்தாலும், மிகப்பெரிய கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ளார் அழகிரி. பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி உள்ளார்" என்று பாராட்டில் எல்லோரையுமே மிஞ்சிவிட்டார்.
10 ஆயிரம் தொண்டர்களா?
11 வயசிலிருந்தே அரசியலில் கால்பதிக்க வந்துவிட்டேன் என்று அழகிரி கூறுகிறார். அப்படியானால் இதுநாள் வரை அழகிரியை அதிமுக கண்ணுக்கு தெரியவே இல்லை போலும். காலங்காலமாக அதிமுகவை அளவுகடந்து விமர்சித்து வந்தவர் அழகிரி என்று தமிழகத்துக்கே தெரிந்த கதைதானே? தெரிந்தும் அழகிரியை தன்பக்கம் இழுக்க காரணம் என்ன? அழகிரி மீது பாசமா, இல்லை அவருக்காக திரண்ட 10 ஆயிரம் தொண்டர்களா?
விழுந்து விடுவாரா?
அதேபோல காவி அரசியல் என்று பாஜகவை ஸ்டாலின் எதிர்க்க துணிந்தபிறகு, அழகிரியிடம் பாஜக வருவது எதற்காக? அழகிரி மீது பாசமா, இல்லை அவருக்காக திரண்ட 10 ஆயிரம் தொண்டர்களா? எதுவுமே இல்லை என்பதும், கருணாநிதி கட்டிக்காத்த கட்சியை உடைக்கத்தான் என்பதை அழகிரி உணர்வாரா? அல்லது ஸ்டாலின் மீதுள்ள கோபத்தால், துண்டு விரிக்க ஆரம்பித்துள்ள பாஜக அதிமுகவில் விழுந்துவிடுவாரா? இந்த 2 இடத்தில் எங்கு அழகிரி விழுந்தாலும் அதோடு அவரால் எழுந்திருக்கவே முடியாது என்பதே நிதர்சனம்!