இதோ இன்னொரு அடிதடி... தொண்டரை வெளுத்த அதிமுக பிரமுகர் மகன்கள்.. "ஷாக்"கான அமைச்சர் ராஜலட்சுமி!
சங்கரன்கோவில்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைச்சர் மணிகண்டன் முன்பு அதிமுக நிர்வாகியை முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் அடித்த நிலையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிமுக தொண்டர் ஒருவரை கிளைக் கழக செயலாளரின் மகன்கள், அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலையில் போட்டு அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏவும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி நேற்று மாலை தனது தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக நடுவக்குறிச்சி கிராமத்திற்கு சென்றார். அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் கூடியிருந்தனர். அதிமுக கிளை கழக செயலாளர் சுப்பிரமணியம் சால்வையோடு வந்தார். அதேபோல கிராமத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் சால்வையோடு அவர் அருகே நின்றுள்ளார்.
அமைச்சர் ராஜலட்சுமி வந்ததும் சுப்பிரமணியம் சால்வையைப் போடப் போனபோது அவரை முந்திக் கொண்டு அந்தத் தொண்டர் சால்வையைப் போட்டு விட்டார். இதனால் சுப்பிரமணியம் கோபமாகி விட்டார். எதுக்கு நீ முதல்ல போட்ட என்று கேட்டுள்ளார். அதற்கு தொண்டரும் பதில் சொல்லியுள்ளார். அப்போது அருகே இருந்த சுப்பிரமணியத்தின் இரு மகன்களும் ஆவேசமடைந்து அந்த தொண்டரைப் போட்டு அடித்து நொறுக்கி விட்டனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் ராஜலட்சுமி அந்தத் தொண்டரை அமைதிப்படுத்தி, சமாதானப்படுத்தினார். பின்னர் அவரை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று சிகிச்சை கொடுத்தனர்.
சட்டசபைத் தேர்தல் சமயத்தில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. அதில் சுப்பிரமணியம் பெரிய அளவில் பணத்தை அமுக்கி விட்டதாக சொல்கிறார்கள். அதுதொடர்பான பகைதான் நேற்று வெடித்து விட்டதாக ஊரில் சொல்லிக் கொள்கிறார்கள்.