ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை வந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சென்னை: அண்மையில் காலமான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை வந்த அதிமுக விவசாய அணி மாநில பொருளாளர் திருச்சி தங்கவேல் மாரடைப்பால் மரணமடைந்தார்.
உடல் நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும், சிலர் மொட்டைப் போட்டுக் கொள்வது என பல்வேறு வகையில் தங்களது கட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அதிமுக விவசாய அணி மாநில பொருளாளர் திருச்சி தங்கவேல் சென்னை வந்தார். ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த மெரினாவிற்கு வந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
பதறிப் போன அவருடன் வந்த சக அதிமுக தொண்டர்கள் அவரைத் தூக்கிக் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உயிர் பிரிந்துவிட்டதை மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் இருந்து வந்த அதிமுக தொண்டர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே ஜெயலலிதா மறைவால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அதிமுக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications