சீட் கிடைக்காத விரக்தி.. அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
தூத்துக்குடி: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அதிமுக பெண் கவுன்சிலர் உள்பட 3 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது அதிமுக தலைமை.
தூத்துக்குடி நகராட்சி தேர்தலில் 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில் தற்போதைய கவுன்சிலர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பல்வேறு வார்டுகளில் போட்டி வேட்பாளர்களாக அதிமுக-வினர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் கடந்த தேர்தலில் 3வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மண்டல பகுதி இணைச்செயலாளர் கோகிலா மேற்கு பகுதி அவைத்தலைவரான சந்தானம், 49வது வார்டு வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட வட்ட பிரதிநிதியான ரமேஷ் ஆகியோர் அதிர்ப்தி அடைந்தனர்.
இதனையடுத்து, தங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர்கள் 3 பேரும் திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.