'தாய்' நகரமானது தலைநகரம்... எங்கு பார்த்தாலும் ஜெ... ஜெ... ஜெ!
சென்னை: தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க இருப்பதையொட்டி சென்னை நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. திரும்பிய திசையெங்கும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்துக்கு சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.
இதன் பின்னர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநர் ரோசையாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஜெயலலிதா. ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சுமார் 7 மாதங்களுக்குப் பின்னர் இன்றுதான் தொண்டர்களையும் பொதுமக்களையும் ஜெயலலிதா சந்திக்கிறார். அத்துடன் நாளை பிற்பகல் மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்க இருக்கிறார். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சென்னை நகரில் திரும்பிய திசையெங்கும் ஜெயலலிதாவை வரவேற்றும் வாழ்த்து தெரிவித்தும் அதிமுகவினர் பதாகைகளை குவித்து வைத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் முதல் கிண்டி ஆளுநர் மாளிகை வரை, போயஸ் தோட்டம் முதல் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வரை, அதிமுக தலைமை அலுவலகம் தொடங்கி சென்னை மெரீனா கடற்கரை, அண்ணா சாலை வரை என அனைத்து திசைகளிலும் 'ஜெ.' மயமாக ஜேஜே.வென காட்சி தருகிறது சென்னை பெருநகரம்!!
போயஸ் கார்டனில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியிலும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் குவிந்துள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை நெடுகிலும் அதிமுகவினர் குவிந்துள்ளனர். ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வரும்போது வரவேற்பதற்காக இப்போதே குவிந்திருக்கின்றனர் அதிமுகவினர்.
எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் குவிந்துள்ளனர், மோதல் வெடித்து விடாமல் தடுப்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலையிலேயே பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் குவிந்திருப்பதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அண்ணா சாலையில் பெரும் நெரிசல் ஏற்படும் அளவுக்கு நிலைமை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதி மரத்து பூங்கொத்தே
ஜெயலலிதாவை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள், போஸ்டர்களில் விதம் விதமான வாசகங்கள் காணப்படுகின்றன. போதி மரத்து பூங்கொத்தே, எங்கள் குலசாமியே என்று விதம் விதமாக ஜெயலலிதாவை புகழ்ந்து பேனர் வைத்துள்ளனர் அதிமுகவினர்.