தீபா வீட்டு முன் இன்றும் திரண்டது கூட்டம்… வழக்கம் போல பால்கனி தரிசனம்
தீபா வீட்டு வாசல் முன் இன்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். வழக்கம் போல தீபாவும் ஜெயலலிதா போன்றே உடை அணிந்து வெளியே வந்து வணக்கம் வைத்துவிட்டுச் சென்றார்.
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விட்டின் முன் இன்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர்.
இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக அதிருப்தியாளர்கள் சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு திரண்டு ஆதரவு கோஷங்களை எழுப்பினர்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை ஏற்றுக் கொள்ளாத அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வாசல் முன் திரண்டு அவரை தலைமை ஏற்க அழைப்பு விடுத்தனர். அந்த வகையில் இன்று வேலூர் மாவட்டத்தில் இருந்து தீபா ஆதரவாளர்கள் சென்னைக்கு வந்து தீபா வீட்டின் முன் திரண்டுள்ளனர்.
ஸ்டிரியோ டைப்
வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருக்கும் தீபா ஆதரவாளர்கள், ஸ்டிரியோ டைப்பில், "சசிகலா எங்களுக்கு வேண்டாம்; தீபா அம்மாதான் வேண்டும். அம்மாவின் ரத்தத்தின் ரத்தம் தீபாதான். அவர்களின் தலைமையை ஏற்க நாங்கள் காத்திருக்கிறோம்" என்று வரிசையாக இம்மியும் பிசாகாமல் மற்ற மாவட்டத்து அதிருப்தியாளர்கள் சொன்னது போன்றே சொல்லி வருகிறார்கள்.
தாயில்லாத தமிழ்நாடு
இன்றும் தீபாவை பார்க்க சென்னை வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் "தாயில்லாத நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது. அம்மா இல்லாத நாட்டில் பாதுகாப்பே இல்லை. பாதுகாப்பை மீண்டும் கொண்டு வர அம்மாவின் ரத்த உறவான தீபா அம்மாதான் ஆட்சி வர வேண்டும்" என்று ஆவேசமாகக் கூறினார்கள்.
இளைய புரட்சித் தலைவி
எம்ஜிஆர் பிறந்த நாளில் கட்சி தொடங்குவதாக தீபா சொல்லி இருக்கிறார். எப்போது 17ம் தேதி வரும் என்று காத்திருக்கிறோம். அதன் பிறகு எங்கள் செயலில் தீவிரம் இருக்கும். அமைச்சர் வேலுமணி கூட எங்களை அழைத்து பேசினார். நாங்கள் சசிகலா பக்கம் போகவில்லை. இளைய புரட்சித் தலைவி தீபா தலைமையில்தான் செயல்படுவோம் என்றும் வேலூர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் தெரிவித்தனர்.
பால்கனி தரிசனம்
தீபா ஆதரவு கோஷத்தை அடுத்து, ஜெயலலிதா போன்றே தலை மற்றும் உடை அலங்காரம் செய்து கொண்ட தீபா பால்கனியில் வந்து வணக்கம் வைத்து தரிசனம் தந்தார். மக்கள் கூட்டம் கூடியுள்ளதால் இன்றும் தீபா வீட்டின் அருகில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.