அம்மன் கோவிலாக மாறிய அப்பல்லோ... கேன் தண்ணீரை மேலே ஊற்றி தரையில் உருண்ட அதிமுகவினர்!
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அது கோவிலாக மாறிவிட்டது. நாள்தோறும் பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக அப்பல்லோ வாசல் முன்பு தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் சிலர் நடு சாலையில் உருள்வலமும் வந்தனர்.
முதல்வர் செல்வி ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், தொழுகைகளும், பிரார்த்தனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான அதிமுகவினரும், பொதுமக்களும் பங்கேற்று மனமுருக பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 22ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 28 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கின்றனர்.
அம்மா நலம்
அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்று கூறினார்.
அக்னிச்சட்டி
அம்மா நலமாக இருக்கிறார் என்று பலரும் கூறினாலும் அவரது முகத்தை பார்த்தால்தான் திருப்தியடைவோம் என்று பல தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் காத்திருக்கின்றனர்.
அதிமுக தொண்டர்கள் சிலர் அப்பல்லோ மருத்துவமனை வாசலில் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். சிலர் காப்பு கட்டி தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இன்னும் சிலரோ நடு சாலையில் உருள்வலம் வந்தனர். அவர்களுக்கு சிலர் கேன் தண்ணீரை ஊற்றி குளிர்வித்தனர்.
பாதையாத்திரை
சென்னை தங்க சாலையில் இருந்து ராயபுரம், வண்ணாரப்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வழியாக கழகத்தினர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பச்சை வண்ண ஆடை உடுத்தி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு, பாதயாத்திரையாகச் சென்றனர். ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, மனமுருக சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தங்கத்தேர்
சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாபன் சுவாமி ஆலயத்தில், லலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், தங்கத் தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு மேற்கொண்டனர். இதேபோல், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திலும் தங்கத் தேர் இழுத்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
சாய்பாபாவிற்கு வழிபாடு
வியாழக்கிழமையான இன்று மயிலாப்பூர் சாய்பாபா ஆலயத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை நடத்தி வழிபட்டனர். தமிழகம் முழுவதும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.