முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி ஒன்றை கி.மீ தூரம் முட்டிபோட்டு நடந்து வேண்டுதல்!
நெல்லை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி நெல்லை அதிமுக பிரமுகர் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டி போட்டு நடந்து வேண்டுதல் செய்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 20 நாட்கள் ஆகின்றன.
இதனிடையே முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் சிறப்பு யாகங்களையும், பூஜைகளையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளரான மாடசாமி என்பவர் வள்ளியூர் முருகன் கோயிலில் உள்ள கிரிவலப் பாதையில், முட்டி போட்டு நடந்தார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டி போட்டு நடந்து வேண்டுதல் செய்தார்.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தில் கழுத்தளவு நீரில் இறங்கி அதிமுகவினர் நூதன முறையில் வேண்டுதல் நடத்தினர்.