கமலுக்கு கடும் போட்டியைத் தரும் அதிமுக.. தலைக்கு 13 எம்எல்ஏ-க்கள் வீதம் விரைவில் 10 அணிகள்?
அதிமுகவில் புற்றீசல் போல் நாளுக்கு நாள் புதிய புதிய அணிகள் பெருகி வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் அணிக்கு 13 எம்எல்ஏ-க்கள் வீதம் விரைவில் 10 அணிகள் வரை உருவாகலாம் போல.
சென்னை: அதிமுகவில் நடக்கும் கோஷ்டி பூசல்களைப் பார்த்தால் தலைக்கு 13 பேருடன் 10 அணிகளாக அது சிதறி விடும் போல தெரிகிறது.
கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 136 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த எண்ணிக்கை 135-ஆக குறைந்தது.
அவர் இருந்தவரை மூச்சு விடுவதற்குக் கூட பயந்தவர்கள் எல்லாம் இன்று முதல்வராக வேண்டும், தனித்து செயல்பட வேண்டும் என்று மனப்பால் குடிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆசை ஆசை
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் என்பது போல, நினைத்தவர்கள் எல்லாம் தன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று அளவுக்கு மீறி ஆசைப்பட ஆரம்பித்து விட்டனர்.
சசிகலாவால் முதல் பிளவு
கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அத்துடன் விடாமல் தமிழகத்தையே ஆள்வதற்கும் ஆசைப்பட்டார். ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியை பறித்தார். இதன் விளைவு அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது.
முற்பகல் செய்யின்...
இவ்வாறு பதவிக்காக ஆட்டம் போட்ட சசிகலா, பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். தற்போது தன் குடும்பமே சின்னாபின்னமாகி வருவதை கண்டு வேதனை அடைந்து வருகிறார். அதேபோல் கட்சியை சித்திக்கு தெரியாமல் கபளீகரம் செய்ய முனைந்த டிடிவி தினகரனின் கதி இந்த நாடே அறிந்த விஷயம்.
சிதறுகிறது அதிமுக
ஏற்கெனவே சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று தனித்து செயல்பட்டு வந்த அதிமுக, சசிகலா, தினகரனும் சிறைக்கு சென்றவுடன் அதிமுக இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தலைமையில் ஒரு தனி அணி உருவானது. இதற்கு போட்டியாக திவாகரனும் தன் கெத்தை கட்சியில் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் அமைச்சர்களின் எண்ணிக்கையை 3 -இல் இருந்து 5-ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி ரகசிய கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல அணிகள்
இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும், டிடிவி தினகரனின் மைத்துனருமான டாக்டர் வெங்கடேஷை அதிமுகவுக்கு தலைமையேற்க வருமாறு சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தலைமையில் தற்போது 13 எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி அணிக்கு எதிராக ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்படியே போனால்
இப்படியே போனால் தலைக்கு 13 பேரைக் கொண்டு 10 அணி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. ஆக, கமல்ஹாசனின் தசாவதாரத்திற்குப் போட்டியாக மாறி வருகிறது அதிமுக!