மடிப்பிச்சை கேட்கிறேன், உங்கள் வாக்குகளைத் தாருங்கள்... அதிமுக வேட்பாளர் கெஞ்சல்!
வேதாரண்யம்: தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்த ஒருமுறை தனக்கு வாக்குகளை மடிப்பிச்சையாகத் தரும்படி வேதாரண்யத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் வித்தியாசமாக வாக்கு சேகரித்துள்ளார் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன்.
வேதாரண்யத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத், சட்டசபை உறுப்பினர் என்.வி.காமராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.டி.ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் ஆர்.சண்முகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்தக் கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், வேதாரண்யம் தொகுதி வேட்பாளருமான ஓ.எஸ்.மணியன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வேதாரண்யம் தொகுதியில் 2006-இல் நான் போட்டியிட்டபோது 59 ஆயிரம் வாக்குகள் பெற்றுத் தோற்றேன். அப்போது திமுக அணியில் இருந்த முக்கியமான கட்சிகள் தற்போது தனித்து நிற்கின்றன.
மேலும் திமுகவில் இருந்த எஸ்.கே.வேதரெத்தினம் அக்கட்சியில் இருந்து வெளியேறி தற்போது பாஜகவில் நிற்கிறார். அதன்பிறகு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 54 ஆயிரம் வாக்குகள் பெற்று என்.வி.காமராஜ் வெற்றி பெற்றார்.
இந்த முறை அதிமுக பொதுச் செயலாளரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் இரட்டை இலைக்கு மடிப்பிச்சையாகக் கருதி வாக்களிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.