ஏற்காடு தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா வேட்புமனு தாக்கல்!
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த பெருமாள் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த பெருமாள் எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜாவும், தி.மு.க. சார்பில் மாறனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா இன்று காலை கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலரும், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சபாபதியிடம் மனு தாக்கல் செய்தார்.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.. இதையடுத்து, முதல்நாளான 9ஆம் தேதியே தி.மு.க. வேட்பாளர் மாறன் மற்றும் 4 சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்தனர்.
மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்பதால் சுயேட்சைகள் சிலரும் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 16 ஆம் தேதி தேதி கடைசி தேதியாகும்.