தூத்துக்குடி மேயர் தேர்தல்.. அதிமுகவின் அந்தோணி கிரேசி வேட்பு மனு தாக்கல்... !
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேசி இன்று தேர்தல் அலுவலர் மதுமதியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக இருந்த சசிகலா புஷ்பா மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் தூத்துக்குடி மாநகராட்சி பொறுப்பு மேயராக சேவியர் பதவி வகித்தார். இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் காலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அந்தோணி கிரேசி அறிவிக்கப்பட்டார்.
வேட்பாளர் அந்தோணி கிரேசி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான மதுமதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் எம்.பி சசிகலா புஷ்பா உள்ளிடோர் உடனிருந்தனர். மாற்று வேட்பாளராக தனலட்சுமி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளரைத் தவிர இதுவரை வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மேலும் அந்தோணி கிரேசி மட்டுமே தற்போது தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.