சேலம் மறுவாக்குப்பதிவு: வாக்குச்சாவடியில் அடாவடியாய் நுழைந்த அதிமுக வேட்பாளர்
சேலம்: மறுவாக்குப்பதிவு நடைபெற்ற சேலம் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கட்சிக் கரை வேஷ்டி துண்டுடன் அதிமுக வேட்பாளர் நுழைந்து அடாவடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இயந்திர கோளாறால் பழுதான சேலம் தொகுதியின் 213வது பூத்துக்கு மறுவாக்குபதிவு சனிக்கிழமை நடைபெற்றது. பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் மாநாகராட்சி பள்ளியில் மக்கள் வாக்களிக்க வந்தனர்.
அங்கு பார்வையிட வந்தார் அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம். அவருடன் எம்.எல்.ஏ., எம்.கே.செல்வராஜ் உட்பட்ட பட்டாளம் வர, அவர்களை பள்ளி வாசலிலேயே காவல்துறை தடுத்து நிறுத்தியது.
அப்போது ‘யாரை தடுத்து நிறுத்துற?’என எகிறினர் அ.தி.மு.க.வினர்.
'வேட்பாளர் மட்டும் போகலாம்... மற்றவர்களுக்கு அனுமதியில்லை. எம்.எல்.ஏ வாக இருப்பவருக்கு அனுமதியில்லை' என காவல்துறை டி.சி பாபு கூறினார். எனவே எம்.எல்.ஏ வை தடுத்தனர் மத்திய ரிசர்வ் படையினர்.
மிரட்டிய வேட்பாளர்
உடனே திரும்பிய வேட்பாளர் பன்னீர்செல்வம் ‘நான் சொல்லியும் இன்னும் விடலையா? எம்.எல்.ஏவையே விட மறுக்குறீர்களா? ஜெயிச்சதும் பார்த்துக்குறேன்' என விரல் நீட்டி பேசிவிட்டு அங்கிருந்து கடுப்பாகவே உள்ளே வந்தார்.
திமுக வேட்பாளருடன் மோதல்
அ.தி.மு.க. கட்சி துண்டு, வேட்டி போட்டு வர ‘இது தேர்தல் விதிப்படி தவறு' என அங்கிருந்த தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜ் கூற, 'நீ என்ன வேணா சொல்லிக்கோ அப்படிதான் வருவேன்' என்றபடி வாக்குபதிவு நடக்கும் பூத் அறைக்கு நுழைந்தார்.
கட்சி கரை துண்டு
அவரை அதிகாரிகள் ‘சார் கட்சி துண்டோடு போகக்கூடாது' என கூக்குரலிட, திரும்பிய பன்னீர்செல்வம் ‘என்னைய தடுக்க முடியாது' என்று சொல்லிவிட்டு நுழைந்தார். அதன்பின் உள்ளே சென்ற ஒரு அதிகாரி ‘சார் பத்திரிக்கையாளர்கள் இருக்காங்க ப்ளீஸ் ஒத்துழைப்பு தாங்க' என கெஞ்சி வெளியே கூட்டி வந்தார்.
உனக்குத்தான் ஓட்டு போட்டேன்
பன்னீர்செல்வம் நுழையும்போதே அங்கேயிருந்த ஒரு முதிய பெண்மணி ‘உனக்கு தான்யா வோட்டு போட்டேன்' என வேட்பாளர் காலை தொட செல்ல ‘இங்கெல்லாம் இப்படி பண்ணி வம்புல சிக்க விட்றாதம்மா' என்றபடியே நழுவினார் பன்னீர்செல்வம்.
திமுக வேட்பாளர் முறையீடு
அங்கு வந்த தலைமை தேர்தல் அதிகாரி அஜய் யாதவிடம், அனைத்தையும் முறையிட்டார் தி.மு.க வேட்பாளர் உமாராணி. அவர் சட்டை செய்யவில்லை. ‘வேட்பாளர் கரைவேட்டி, துண்டோடு வருகிறார். இது தவறு ஆனால் நீங்கள் தடுக்க மறுக்குறீர்? அப்படியென்றால் நானும் இங்கேயே உதயசூரியன் சின்னத்தை கைகளால் காட்டவா?' என கோபமாக விரல்களை விரித்து காட்டினார்.
உமாராணி குற்றச்சாட்டு
அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் அத்துமீறுகிறார். தேர்தல் விதிகளை கடைபிடிக்கவில்லை என்றார் தி.மு.க வேட்பாளர் உமாராணி. மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி முன்பாக அதிமுக, திமுக வேட்பாளர்களின் சலசலப்பு காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.