4 தொகுதிகளில் ஒரே நேரத்தில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தின் 3 தொகுதிகளிலும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நெல்லித் தோப்பு தொகுதியிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்தன.
அதன்படி, இன்று அதிமுக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி, தஞ்சையில் எம். ரெங்கசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே. போஸ், புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் ஓம்சக்தி சேகர் ஆகிய 4 பேரும் ஒரே நேரத்தில் அந்தந்த பகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
முன்னதாக, கடந்த மே மாதம் 16ம் தேதி அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் நடக்க இருந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்எல்ஏ சீனிவேலு திடீரென மரணம் அடைந்ததால் அந்தத் தொகுதியில் காலி இடம் உருவானது. எனவே, இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் வரும் 19ம் தேதி தேர்தலை அறிவித்தது.
இதே போன்று புதுச்சேரி மாநிலம் நெல்லித் தொப்பு தொகுதியில், அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக, எம்எல்ஏ ஜான்குமார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதிக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருந்தது.
இதனையடுத்து, இந்த 4 தொகுதிக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் இன்று வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
நான்கு தொகுதி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அதிமுக தொண்டர்கள், எம்எல்ஏ, எம்பிக்களும் வீடு வீடாகச் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.