தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் இன்று தகுதி நீக்கம்?
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால் சபாநாயகருடன் தலைமை கொறடா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video
சென்னை: சபாநாயகர் தனபால் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளிக்க விதி கெடு முடிவடைந்த நிலையில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கையில்லாததால் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனிடையே, தமது கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் கொறடாவின் புகாருக்கு உரிய பதிலளிக்குமாறு 19 எம்எல்ஏக்களும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
அணி தாவினார்
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ. ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 18 எம்எல்ஏக்கள் புதுவையிலிருந்து கர்நாடகாவின் கூர்க்கில் உள்ள விடுதியில் தற்போது தங்கியுள்ளனர்.
வீட்டுக்கு அனுப்புவோம்
அதிமுக பொதுக் குழு கூட்டத்தால் வெகுண்ட தினகரன், ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் உள்ளடி வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்தார். அதனால் அந்த 18 பேரும் ராஜினாமா செய்தால் அரசு கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது.
சந்திக்கும் வாய்ப்பு இல்லை
இந்நிலையில் சபாநாயகரை தங்கதமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும் மட்டுமே சந்தித்துள்ளனர். மீதமுள்ள எம்எல்ஏக்கள் யாரும் சந்திக்கவில்லை. இதனிடையே சபாநாயகரின் நோட்டீஸுக்கு பதிலளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. எனினும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆலோசனை
மேலும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூர்க்கிலிருந்து சென்னை புறப்பட்டதாகவும் தெரியவில்லை. இதுவரை சபாநாயகருக்கு விளக்கம் அளிக்க அவர்கள் வரவில்லை. இந்நிலையில் சபாநாயகர் தனபாலை தலைமை கொறடா ராஜேந்திரன் சந்தித்து காலை ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகமும் உடனிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் ஆஜரான தமிழக தலைமை வழக்கறிஞர் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம்?
இந்நிலையில் சபாநாயகருடன் கொறடாவும், அமைச்சர்களுடன் முதல்வரும் நடத்திய ஆலோசனையையும், தமிழக தலைமை வழக்கறிஞரின் பதிலையும் வைத்து பார்க்கும்போது 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.