தென்னை மரத்துக்கும் தண்ணீர் பாய்ச்சு.... கவுன்சிலரை அடித்து சட்டையைக் கிழித்த கோவிந்தராஜ்!
திருப்பூர்: மாநகராட்சி லாரியில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து கொண்டிருந்த அதிமுக கவுன்சிலரிடம் வம்பு செய்து முகத்தில் குத்தி, சட்டையைக் கிழித்து விட்டதாக ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது.
அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும் கவுன்சிலர் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில், மாநகராட்சி லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அப்போது, அங்கு வந்த 58-வது வார்டு அதிமுக, கவுன்சிலர் வேலுசாமி, இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு ஏ.டி., காலனி பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்லுமாறு லாரி டிரைவரிடம் கூறினார்.
அப்போது, குடிபோதையில் அங்கு வந்த கோவிந்தராஜ் என்பவர், கவுன்சிலரை பார்த்து, எனது தோட்டதத்தில் உள்ள தென்னை மரங்கள் எல்லாம் காய்ந்து வருகிறது எனக்கும் லாரி தண்ணீர் தர வேண்டும் என கூறியுள்ளார்.
அது எப்படிப்பா மாநகராட்சி குடிநீரை தோட்டத்திற்கு எப்படி தர முடியும் என கவுன்சிலர் கூற, கோபமாகி விட்டார் கோவிந்தராஜ். உடனே வேலுச்சாமியை முகத்தில் குத்தினார், சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தார்.
திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட கோவிந்தராஜனை தேடி வருகின்றனர்.