"அம்மா" படத்துடன் சாலையில் அதி வேகம்.. கவுன்சிலர் மாமாவின் காரை வைத்து பயமுறுத்திய மருமகன்!
சேலம்: முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் பொருத்தப்பட்டிருந்த ஒரு சொகுசு கார் சேலம் நகரை அச்சுறுத்தி விட்டது. அந்தக் காரை ஓட்டி வந்தவர் தாறுமாறாக சாலையில் காரை ஓட்டியதால் போலீஸார் அந்தக் காரை கடுமையாகப் போராடி நிறுத்தினர்.
போலீஸ் எச்சரித்தும் காரை முதலில் நிறுத்தவில்லை காரை ஓட்டிய நபர். மக்களுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தும் வகையில் ஓடிய அந்தக் காரை பின்னர் தடுத்து நிறுத்தி அதில் உள்ள நபரைப் பிடித்தனர் போலீஸார்.
விசாரணையில் அவர் சேலம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் என்பவரின் மருமகன் நவீன்குமார் என்று தெரிய வந்தது. 17 வயதான இவர் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். அவரது பெற்றோரை வரவழைத்த போலீஸார் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து நவீன்குமாரை விடுவித்தனர்.
டிரைவிங் பண்ணும் வயதே இல்லையே
18 வயதானால்தான் டிரைவிங் உரிமமே கிடைக்கும். ஆனால் இந்த நவீன் குமாரோ 17 வயதான நிலையில் அதைப் பொருட்படுத்தாமல் அதிமுகவில் தனது மாமா இருப்பதையே சாதமாக பயன்படுத்திக் கொண்டு தாறுமாறாகவும், அதி வேகாகமாகவும் காரை ஓட்டி மக்களை அதிர வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்மாமாவாம்
சம்பந்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் பிரகாஷ், சேலம் மாநகராட்சியில் 16வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவரது காரில் முன்னும் பின்னும் பெரிய சைஸ் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார். இந்தக் காரை எடுத்துக் கொண்டுதான் அராஜகம் செய்துள்ளார் நவீன்குமார்.
மேட்டூர் சாலையில் அதி வேகம்
நவீன்குமார் தனது மாமாவின் காரை எடுத்துக் கொண்டு சங்ககிரியில் டீசல் நிரப்பிக் கொண்டு பவானி வழியாக மேட்டூர் செல்லும் சாலையில் அதிவேகமாக சென்றார்.
2 பேர் மீது மோதல்
கார் குருப்பநாயக்கன்பாளையம் அருகே சென்றபோது, நடந்து சென்ற இருவர் மீது மோதியுள்ளது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மூன்று ரோடு அருகே காரை வழிமறித்தவர்கள் மீது மோதுவது போல் சென்ற கார் நிற்காமல் போய் விட்டது.
போலீஸ் வந்தது
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் சித்தாறு அருகே ரோந்து வாகனத்துடன் காத்திருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த காரை நிறுத்துமாறு அவர்கள் கை காட்டியும் காரை நிறுத்தவில்லை நவீன்குமார். மாறாக, நிற்காமல் சென்ற கார் எதிரே வந்த சரக்கு ஆட்டோக்கள் மீதும் உரசிவிட்டு நிற்காமல் சென்றது.
சாலைத் தடுப்புகள் போட்டு பிடித்தனர்
இதையடுத்து, ரோந்து போலிஸார் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் அதிரடியாக சாலையின் நடுவே தடுப்புகளைப் போட்டு வைத்து காத்திருந்தனர். அம்மாபேட்டை வந்த கார், சாலைத் தடுப்புகளைப் பார்த்ததும் சற்று தொலைவிலேயே நின்றது. அப்போது, காவல் துறையினர் காரின் கதவைத் திறக்க முயன்றபோது, திடீரென கார் பின்னோக்கி கிளம்பியது. போலீசார் விடாமல் பின்தொடர்ந்து சென்றனர். இதில், நிலைதடுமாறிய கார் சாலையோரப் பள்ளத்தில் இறங்கியது.
சிக்கினாருய்யா மாப்ளே...
அப்போது, வண்டியின் கியரை மாற்றி மீண்டும் முன்னோக்கிச் செல்ல முயன்றபோது கார் கிளம்பவில்லை. அதற்குள் போலீஸார் காரின் கதவைத் திறந்து காருக்குள் இருந்த நவீன்குமாரை அப்படியே தூக்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மாமா வீட்டு விசேஷத்துக்குப் போனாராம்
விசாரணையில், நவீன்குமார் ஓட்டுநர் உரிமம் பெற பயிற்சி பெற்று வருவதும், மாமா பிரகாஷ் வீட்டில் நடந்த விசேஷத்துக்கு சென்றபோது, அங்கிருந்த காரை எடுத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவர் நவீன்குமாரை காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்த போலீசார் மாணவரின் பெற்றோர்களை வரவழைத்து, அவர்களிடம் எழுதிவாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.